வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, August 4, 2011

மனிதம் தொலைக்கும் மானுடம்...


இடுகைப் (Blogs) பெட்டிக்குள் புழுங்கும் புழுக்களாக...
வலைத் தளங்களில் (Web Sites) சிக்கித் தவிக்கும் சிலந்திகளாக...
முகப் புத்தகத்தில் (Facebook) புதையுண்ட பூச்சிகளாக...
செல்லிடப் பேசிகளில் (Cell /Smart Phones) மேயும் மந்தைகளாக...
மடிக் கணினிகளில் (Laptops) மயங்கும் விட்டில்களாக...
கைக் கணினிகளை (Tablets) ஏந்தித் திரியும் இயந்திரங்களாக...

இன்னும் எத்தனை நாட்கள் தான் மனிதம் தொலைத்துவிட்டு,
மானுடம் தேடுவோம் நாம்? பாரதிதாசன் கூற்று -
"பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்,
என் குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்...
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு..."

தொலைத்த இடம் இருட்டியதால் வேறிடம் போய்த் தேடுவதா?
மானுடத்தைத் தொலைத்து விட்டு, மனிதர்கள் நாம் வாழுவதா?
சிந்தியுங்கள் நண்பர்களே!!!

இக்கருத்தைப் பரப்பிடவும், முகப் புத்தகம், வலைத் தளம் மற்றும்
இடுகைகளின் உதவியை நாடும், என்றும் உங்கள் அன்புடன்...

- கலைபிரியன்...

Sunday, May 15, 2011

ஜனநாயகத்தில் குப்பனின்/சுப்பனின் பங்களிப்பு மற்றும் புதிய அரசிடம் எனது எதிர்பார்ப்பு...


தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதனையும் மீறி, ஆட்சியாளர்களின் மேல் இருந்த கோபமும் சேர்த்து சற்று மிகையான வெற்றியையே எதிர்க் கட்சி பெற்றுள்ளது. புதிய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்கள் தொண்டாற்றுவதற்காக மக்களால் அமைக்கப் பட்டது என்று பொத்தாம் பொதுவாகக் கருத்துக் கூறி விட முடியாது. அப்படி ஒரு எதிர்பார்ப்பைப் நிறைவு செய்யக் கூடிய அளவுக்கு மாற்று சக்திகள் தமிழகத்தில் இல்லை என்பது வாக்களித்த அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்பதே உண்மை.

ஒரு பெரிய மாற்றம் நிகழும் பொழுது, அந்த மாற்றத்தை ஏக மனதாக வரவேற்று கொண்டாடிவிட்டு, முடிந்த அளவுக்கு உப்புப் பெறாத அரட்டைக் கச்சேரிகளை, ஊடகங்கள் வாயிலாக நிகழ்த்திவிட்டு, ஐந்தாண்டு காலம் உறங்கிக் கழித்து விட்டு, அப்புறம் ஆட்சியாளர்களைக் குறை கூறி மாற்றம் தேடுவதே நமது பிழைப்பாகிப் போய் விட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியவுடன், ஒவ்வொரு நாளும் வடிவேலு குறித்தும், கலைஞர் குறித்தும், ஏனையோர் குறித்தும் ஊடகங்களில் உலா வரும் நகைப்புக்குரிய விஷயங்கள் இவற்றையே பிரதிபலிக்கின்றன. அதுவே தொடர்ந்து நிகழ்ந்து வருமே ஆனால், சற்றே திகட்டத் துவங்கிவிடும்.

மக்கள், பொறுப்பான ஜனநாயகத்தின் பங்காளிகளாகத் தொடர்ந்து அரசின் செயல்பாடுகளையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும் ஆக்கப் பூர்வமான பார்வையுடன் அணுகி விழிப்புணர்வுடன் இருப்பார்களே ஆனால், வாக்காளர்களை ஏமாளிகளாக நினைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்து வருவோர் படிப் படியாக அரசியலிலிருந்து விரட்டி அடிக்கப் படுவர். புதிய, மாற்று சக்திகள் உருவாகவும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

அரசியல் சம்பத்தப் பட்ட விஷயங்களிலும், அரசு நடக்கும் விதம் குறித்தும், இனியேனும் "நான் உண்டு, என் வேலையுண்டு..." என்று இருந்திராமல், ஊடகங்கள் வாயிலாக அறியப் படும் செய்திகளை இனியேனும் பொது மக்கள் தெரிந்து கொண்டு ஆக்கப் பூர்வமானவர்களாக மாற வேண்டும். "அதற்கு ஏது நேரம்?..." என்று வெட்டிச் சாக்கு சொல்பவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் - "பிரபு தேவா/நயன்தார திருமணம், தீபிகா படுகோனின் ஆண் நண்பர்கள், த்ரிஷாவின் நள்ளிரவுக் கூத்துக்கள், தோனியின் தேனிலவு அட்டவணை..." போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்காகச் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு மடங்கு ஜனநாயக நடைமுறை குறித்து அறிந்து கொண்டு, அலசி ஆராய நீங்கள், இதுவரை  முற்பட்டதுண்டா? காலம் இன்னும் தாழ்ந்து விடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இனியேனும் பொறுப்புணர்ச்சியுடன் "bottomline" குறித்த புரிதல் இருந்தால், உடனடியாக இல்லாவிட்டாலும், சிறிது காலம் கழித்தாவது நமது நாட்டை வல்லாரசாக மாற்றுவதில் நமக்கும் உண்மையான பங்கு இருக்கும்.

சரி. ரொம்ப அளந்துட்டேன்... இனி விஷயத்துக்கு வருவோம்...

புதிய அரசிடம், ஒரு சராசரி குடிமகனாக எனக்கு உள்ள எதிர்பார்ப்பை, தொகுத்து அளித்துள்ளேன்... படித்துவிட்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்...

சட்டம் ஒழுங்கு: "தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்" என்றாகிவிட்டது கடந்த ஆட்சியில். யார் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவர் மீது ஒரு அதிகாரி நடவடிக்கை எடுப்பது, அவன் செய்த செயலின் அடிப்படையில் இல்லாமல், அவனது அரசியல் பின்புலத்தைப் பொறுத்தது என்றாகிவிட்டது. இந்தக் கேவலமான நிலை மாற வேண்டும். இந்நிலையை பெருமளவு (முழுமையாக என்று கூற முடியாது) மாற்றக் கூடிய திறமை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஆட்சியாளரிடம் இருக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம். இந்நிலையை மாற்ற, பதவி ஏற்கும் முதல் நாளில் இருந்தே இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் தான் வாக்களித்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.

மின் வெட்டு: அரசின் கீழ் இயங்கி வரும் மின் நிறுவனமும், மின்சாரத் துறையும் செயலிழந்து, மாநிலத்தைக் கற்காலத்தை நோக்கிப் பின் நகர்த்திவிட்டது என்று கூறுவது மிகையாகாது. ஆக்கப் பூர்வமான அதிகாரிகள் துணையுடன், துறையையும் நிறுவனத்தையும் புனரமைத்துப் (களைகளை அகற்றி) போர்க்கால அடிப்படையில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை வகுத்து, இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட, மின் வெட்டு அறவே இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத் திறன் கொண்ட முதல்வரை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதால், இதனை அவர் செய்வார் என நம்பகிறேன். 

மாநிலத்தின் நிதி நிலை: "சட்டியில் இருந்தால் தானே, அகப்பையில் வரும்...". கஜானாவின் இருப்பு என்ன என்பதை ஆராய்ந்து, அதற்கேற்பப் புது வருமானம் கிடைக்க வழி வகுக்க வேண்டியவர்கள், "ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே..." என சற்றும் ஆக்கப் பூர்வமில்லாத திட்டங்களுக்காக அள்ளி இறைத்து, கடந்த ஐந்தாண்டுகளில், மாநிலத்தின் நிதிநிலையை அதல பாதாளத்துக்குக் கொண்டு சென்று விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படிப் பட்ட நிலையை இரண்டு முறை சமாளித்துத் தன்னால் இயன்ற அளவுக்கு நிர்வாகத்தை நடத்திய முதல்வரையே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றாலும், இந்த நிலை இன்னும் சற்று அதிகக் கவலை அளிக்கக் கூடியதாகவே, இன்று, இருக்கிறது. இந்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதன்மை அளித்து, ஓரளவுக்கு நிலைமை சீரடைந்த பின்பு, செலவீனங்களுக்கான திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பதே மக்கள் எதிபார்ப்பு. என்ன தான் இலவசங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தாலும், இலவசங்களை நம்பி மக்கள் வாக்களிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்திருக்கையில், இதுவும் புதிய ஆட்சியாளர்களுக்கு சாத்தியம் என்றே நம்புவோம்.

விலைவாசி கட்டுப்பாடு: ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டுக் கத்தரிக்காய் அறுபது ரூபாய்க்கு விற்பதைக் கட்டுக்குக் கொண்டுவராமல் விட்டால், அந்த அரிசி ஏழை மக்களுக்கு வாய்க்கரிசிக்கு சமம் என்பதை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காத அரசையே கடந்த ஐந்தாண்டுகளாகப் பார்த்தோம். இந்த விஷயத்தில் மத்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டே, அந்த அரசைக் கை காட்டித் தப்பித்தார்கள் என்பது அவர்களின் கையாலாகாத் தனத்தையே அடையாளம் காட்டியது. பயனற்ற இலவசங்களைக் கொடுக்க ஒதுக்கப் பட்ட பணத்தில் பாதிப் பணத்தை வரி மானியமாகவும், பெற்றோல் டீசல் மானியமாகவும் செலவிட்டிருந்தால், ஆன்லைன் வர்த்தகம் மூலம், பொருட்களைப் பதுக்கி, விலையேற்றத்திற்குக் காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் அடித்திருந்தால் எளிமையாக விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஐந்து முறை ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தவரால் இதனைச் செய்ய முடியவில்லை என்பது நமது மாநிலத்திற்கு வெட்கக் கேடு. இந்த விஷயத்திலும் புது அரசு அதிக கவனம் செலுத்தி மக்களுக்குப் பயன்படும்படியான செயல்களை முடுக்கி விட வேண்டும்.

கல்வி வளர்ச்சி: சமச்சீர் கல்வி என்ற பெயரில், கல்வியின் தரத்தைக் குறைக்க முற்பட்டுக் கிட்டத் தட்ட வெற்றிபெற்றுவிட்டார்கள் கடந்த ஆட்சியாளர்கள். குழப்பங்களைக் களைந்து இந்த விஷயத்தை சரி செய்ய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அல்லது, இந்தத் திட்டத்தை புதைத்துவிடுவதே நல்லது. கல்வியைத் தொழிலாக நடத்தி அளவுக்கதிகமாக வசூல் வேட்டை நடத்திவரும் பள்ளிகளின் நிர்வாகத்தினரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தொழில் துறை முன்னேற்றம்: தகுதி படைத்த எந்த ஒரு நிறுவனமும், நபரும், எந்தத் தொழிலையும் தொடங்கி நடத்த அனுகூலமான நிலைமையை உருவாக்க வேண்டும். மத்திய அரசு, மற்றும் மாநில அரசின் உதவியுடன் ஒரு சில தனிப் பட்ட மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் போட்டியாளர்களை நசுக்கும் தற்போதைய நிலைமை அகற்றப் பாடு பட வேண்டும்.

விவசாயம் சார்ந்த வளர்ச்சி: கடந்த பல ஆண்டுகளாக பாவப் பட்ட தொழிலாகிவிட்ட விவசாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஆவன செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப் படும் நலத் திட்ட உதவிகளை, மோசடி செய்து, நிலச் சுவான்தார்கள், அவர்கள் பெயரில்  பயனடைவதைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். அண்டை மாநிலங்களுடனான நதி நீர்ப் பிரச்சனைகளில், அவர்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவைப் பேணி, அதன் பயனாகப் பேசித் தீர்க்க வேண்டும். இது விவசாயிகளுக்குப் பேருதவியாக அமையும்.

ஆக்கப் பூர்வமான வளர்ச்சிப் பாதை: வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் முதலீடு செய்ய முன் வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களைக் கவரும் விதமாகக் கட்டுமானத் துறையில் முன்னேற்றத்தைச் செய்து, அவர்கள் தொந்தரவு இல்லாமல் தொழில் நடத்த ஆவன செய்ய வேண்டும். இதற்காக, சென்னை மற்றும் இதர நகர் விமான நிலையங்களை சர்வதேசத் தரத்துடன் உயர்த்துவது மிக மிக அவசியம். துணை நகரம் அமைப்பதில் மக்கள் நலன் காக்கப் பட்டு, அவ்விஷயங்களில் அரசியல் தலையீடு புரிந்து தடுக்க நினைப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைப் படுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களைத் தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய அரசின் தலைவரால் மிகவும் எளிதாகச் செயல்படுத்த முடியும்.

அதே சமயம், அவற்றையும் மீறிக் கீழ்க் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களிலும் அவர்கள் நல்ல முறையில் செயல்படுவார்களே ஆனால், அதன் மூலம் வருங்காலங்களில் மக்கள் மனதில் தனித் துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பிடிப்பதற்கும் அவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக வருகின்ற ஐந்தாண்டுகள் அமையும். மேலும், இந்த விஷயங்களைச் சரியாகக் கிரகித்துச் செயல்படாததால் தான் இது வரை அடைந்த தோல்விகளை அவர்கள் சுவைக்க நேர்ந்தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர் நலனில் அக்கறை: இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை, தாய் நாட்டுத் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, கண்டனம் செய்து சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சித் துணையுடன் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்குத் தன்னாலான நெருக்குதல்களைத் தந்து ஈழத் தமிழர் நலன் காக்கப் பாடுபட வேண்டும்.

கண்ணியமான அரசியல் செயல்பாடு: யாரும் அணுக முடியாத வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொண்டு செயலாற்றுவதையும், தனக்காகப் போக்குவரத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்களிலும் இனியும் தொடர்ந்து ஈடுபடக் கூடாது. ஜால்றாக்களையும்/அடிப் பொடிகளையும் மட்டுமே நம்பாமல், ஜே.சீ.டி. பிரபாகர், சைதை துரைசாமி, வைகை செல்வன், பழ. கருப்பையா, கோகுல இந்திரா, ராஜ கண்ணப்பன், பீ.எச். பாண்டியன், பொன்னையன், டாக்டர் மைத்ரேயன் போன்ற திறமை மிக்க, ஆளுமைத் திறன் கொண்ட தலைவர்களைக் கட்சியின் சார்பில், கட்சி, ஆட்சி மற்றும் டில்லி களங்களில் முன்னிலைப் படுத்தி, அவர்களது ஆலோசனைகளுடன் கட்சி மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளை வகுத்தால் உண்மையில், அ.இ.அ.தி.மு.க வால் கூட ஓரளவு கண்ணியமான ஆளுங்கட்சியாகச் செயல்பட முடியும். அது மட்டுமல்லாமல், கொள்கைகளையும், கண்ணியத்தையும், தாங்கள் செய்யும் தவறுக்குக் கேடையமாகப் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே கடந்த சில காலமாக முயன்று வரும் தி.மு.க இத் தேர்தலில் கற்றுக் கொண்ட பாடத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு செயலாற்றுவது ஆட்சியாளர்களுக்கு நல்லது.

ஊழல் ஒழிப்பு: ஊழல் என்பது இவ்வளவு காலமாகப் புரையோடிவிட்டபின், அதனை ஒரு சில நாட்களில் ஒழிப்பது என்பது முடியாத காரியம். அப்படி இந்த அரசு செய்யும் என்று எதிபார்ப்பதும் பைத்தியக் காரத் தனம். அதே வேளையில், "இன்றே நாம் உயிர் வாழ்வதன் கடைசி நாள், அதனால் முடிந்த அளவு சம்பாதித்துவிட வேண்டும்...", என்பது போல, பல அதிகார மையங்களை நிறுவி அவற்றின் வாயிலாக, இன்ன அளவு என்று ஒரு வரைமுறையே இல்லாமல் சுருட்டுவதால் ஏற்படும் நிலைமை என்ன என்பதை இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் கண்கூடாகப் பார்த்தோம். அப்படிச் செய்ததனால் கீழ் மட்டங்களில் நடந்த சுருட்டல்களைத் தட்டிக் கேட்கத் திராணி அற்றவர்களாய் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இருந்த அவலமான நிலையைப் பார்த்தோம். அப்படிப் பட்ட நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து படிப் படியாக அனைத்து மட்டங்களிலும் ஊழலைக் களையப் புதிய அரசு ஆவன செய்ய வேண்டும்.

மேலே கூறியவை எல்லாம் கொஞ்சம் அதிகப் படியான எதிர்பார்ப்பு என்று எண்ணிவிடாதீர்கள். ஆட்சியாளர்களுக்கு அரசியல் சாசனச் சட்டத்தின் படி அளிக்கப் பட்டுள்ள வானளாவிய அதிகாரங்களையும், அவற்றைச் செயல்படுத்தத் துணையாய் உள்ள ஆயிரக் கணக்கான அதிகாரிகளும் தங்களின் நிலையை உணர்ந்து செயல்பட்டால், அவ்வளவும் சாத்தியமே.

பார்ப்போம்... எவ்வளவு தூரம் இந்த அரசு கடக்கிறது என்று... வாழ்த்துக்கள்...

கலைபிரியன்...

Tuesday, March 22, 2011

குறிச்சிடுங்க அவுக தேதிய...

பிள்ளையார் கோவிலில் அருகம் புல் கொடுக்காக - எல்லாப் பிணிகளையும் போக்க வல்லதாம்...
சிவன் கோவிலில் வில்வ இலை தந்தாக - நீரிழிவு நோயே வராமல் செய்வதாம்...
பெருமாள் கோவிலில் துளசி தாராக - சளி ஏதும் அண்ட விடாதாம்...
மேலும் கொடுத்தாக பச்சைக் கற்பூரத் தீர்த்தம் - நீரின் கிருமிகளை நிர்மூலமாக்கிடுமாம்...

சாமிக்குக் கும்பிடு போட்டாப் பிணி தீராதுன்னு, பகுத்தறிவுப் பகலவன் சொல்றாக...
அதுக்குப் பதிலா, கும்புடு போடுற ஆசாமிக்கு வோட்டுப் போட்டா,
இலவசமா நிலவத் தாரமுன்னும் சொல்லுறாக...கேட்டுக்குங்க சேதிய...
இனியாவது குறிச்சிடுங்க அவுக தேதிய... ஏப்ரல் 13... தேர்தல் நாள்...

- கலைபிரியன்

Monday, March 21, 2011

படித்த காமராஜ்...


1967 தேர்தலில், காமராஜரை எதிர்த்து தி.மு.க சார்பில் பெ. சீனிவாசன் என்ற இளைஞர் களம் கண்டு வென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரது வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கூட்டப்பட்ட பொதுக் கூட்டத்தின் போது நடந்த சுவையான சம்பவம்.

அந்தப் பகுதியில் சிலரால் அறியப்பட்ட ந. காமராஜ் என்ற இளைஞர் இருந்தார். அவர் படித்தவர். அவர் பெ. சீனிவாசனைப் பாராட்டிப் பேச ஏற்பாடாகியிருந்தது. அதற்காக தி.மு.க அடித்த சுவரொட்டியில் இருந்த வாசகம் - "பெ. சீனிவாசனைப் பாராட்டிப் படித்த காமராஜ் பேசுவார்" என்று காமராஜரை மட்டம்தட்டுவது போல அமைந்திருந்தது அந்த வாசகம்.

அதனைப் பெரியார் கவனத்துக்குக் கொண்டு செல்கின்றனர். அவர் சொன்னார் - "சுவரொட்டியில் ஒரு சின்னத் திருத்தம். பெ. சீனிவாசனைப் பாராட்டிப் படிக்காத காமராஜ் கட்டிய பள்ளிக்கூடத்தில் படித்த காமராஜ் பேசுவார் என்றிருந்திருக்க வேண்டும்..." என்று.

காமாராஜர் ஆட்சிக்கு வந்த போது, தமிழகத்தில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 35,000. அவர் ஆட்சியில் இருந்து இறங்கும் போது, அவை 1,60,000. இந்தப் புள்ளிவிவரத்தைக் கூட எடுத்து வைக்காமல், சுவரொட்டி ஒட்டியவர்களை நாணித் தலை குனியச் செய்திருக்கிறார் பெரியார். இன்று, அவர் வழித் தோன்றலாக உருவாகிய கட்சிகளின் கழகக் கண்மணிகள் நடத்துகின்ற கூட்டங்களையும், கடைபிடிக்கின்ற நாகரீக அணுகுமுறைகளையும் காணும் போது, இவ்விஷயங்களைக்
கேள்விப் படுகின்ற நமக்கு ஏக்கமாகத் தானே இருக்கும்?

- கலைபிரியன்

இன்று உலகத் தண்ணீர் தினம்...

வங்கக் கடலில் சுனாமியாய் வந்தால்,
வாரிச் சுருட்டி ஓடும் நீங்கள்... வீட்டு
வாசற் குழாயில் நான் வரும்போது மட்டும்
வால் தனத்தைக் காட்டுவதேன்?

கார்மேகத்தின் கண்ணீர்த் துளி நான்...
கரைந்தால் மழை, கதறினால் வெள்ளம்...
என்னை வரச் சொல்லித் தூது விடும் மரங்களை
நீங்கள் வெட்ட, கனக்கிறது என் உள்ளம்...

வங்கிக் கணக்கில் துட்டுச் சேர்க்கும் நீங்கள்,
மண்ணின் மாடியிலிருந்து என்னை மட்டும்
ஒரு சொட்டு விடாமல் உரிந்துவிடுவதில்
தான் என்ன நியாயம்? - சொல்லுங்கள்...

வரவுக்கேத்த செலவு, வாழ்க்கையெல்லாம் மகிழ்வு...
சிந்தியுங்கள்... என்னை, இனியாவது சேமியுங்கள்...

- கலைபிரியன்

தேர்தல் அறிக்கையில் வாக்காளர்கள் எதிர்பார்க்கும் பதில்கள்...

பரம ஏழைகள் என்ற ஒரு பிரிவே ஒழிக்கப் பட வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அரசின்பால் மக்களுக்கு இருக்கையில், "பரம ஏழைகளுக்கு இலவசம்..." என்ற பகிரங்கமாகவே ஒரு ஆளுங்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டு விளம்பரப்படுத்துவது மகா கேவலம். மேலும், கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் அவர்கள் அடைந்த தோல்வியையே இது பிரதிபலிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும், மக்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் எதிர்பார்ப்பது கீழ்க்காணும் கேள்விகளுக்கான பதில்களாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, இலவசங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களாக, வாக்காளர்கள், இனிமேலும் இருந்துவிடக் கூடாது.

கல்வியின் தரத்தையும், அதன் வியாபாரமயமாக்கலைத் தடுக்கவும் என்னென்ன செய்தீர்கள்?
விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க என்ன திட்டம் வகுத்தீர்கள்?
வேலைவாய்ப்பைப் பெருக்க நீவிர் செய்த செயல்கள் என்ன?
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்த எவ்வளவு ஒதுக்கினீர்கள்?
லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க என்ன செய்வதாய் உத்தேசம்?
மின்சாரம், சாலைகள் மற்றும் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் திட்டங்கள் உங்கள் கைவசம் இருக்கிறதா?
விவசாயம் தழைக்க ஏதேனும் செய்ய முடியுமா?
தொழில் துறை வளர்ச்சியில் குஜராத் போன்ற மாநிலங்களுடன் தமிழகம் போட்டி போடா இயலுமா?
பெங்களூருக்கும் ஹைதராபாத்துக்கும் இணையான விமான நிலையம் சென்னையில் வருமா வராதா? இதனால் தொழில் துறையில் தமிழகம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறதே?
காலை மாலை நேரங்களில் நகர்ப் புறப் போக்குவரத்து நெரிசலை எவ்வாறு சமாளிப்பது?
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கல்லவா இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்? சாதிய ரீதியில் வோட்டுக்காக இட ஒதுக்கீடு அளிப்பது எந்த விதத்தில் நியாயம்?
ஒரு லட்சம் கோடி ரூபாயான மாநிலத்தின் கடனை அடைக்க என்ன தான் வழி?
எங்களுக்கான மக்கள் பிரதிநிதி எத்தனை நாட்கள் தொகுதியில் இருப்பார்? எங்களுக்கான குறைகளை அவரிடம் நேரில் கூறி முறையிட இயலுமா?
மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு ஒளிவுமறைவின்றி இருக்கவும், எதிர்க் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தால், அரசால் மக்கள் புறக்கணிக்கப் படாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப் படுமா?

- கலைபிரியன்

Friday, March 18, 2011

கலைஞரின் கடந்த ஐந்தாண்டு ஆட்சி கால சாதனைகள்... தேர்தல் பிரசாரம் தேவையா?


இன்றைய ஆளுங்கட்சி கடந்த ஐந்தாண்டுகளில் செய்த அரும் பெரும் சாதனைகள் தான் எத்தனை எத்தனை... நாங்கள் வோட்டுக் கேட்டு வர வேண்டிய அவசியமே இல்லை... வாக்காளர்களே, தத்தம் வோட்டுக்களை எங்களுக்கும், எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டுவிடும்படியான சாதனைப் பட்டியல், இதோ...

மகளிர் மேம்பாடு - தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், கனிமொழி, கயல்விழி, எழிலரசி, பூங்கோதை ஆலடி அருணா, தேன்மொழி கோபிநாதன், குஷ்பூ, விஜயா தாயன்பன், இந்திரகுமாரி போன்ற கஞ்சிக்கு வழியில்லாத இன்னும் எவ்வளவோ திராவிட குலவிளக்குகளை, மகளிர் குல மாணிக்கங்களைப் பெருமைப் படுத்திக் கோடிகள் புரளும் கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் அமரச் செய்யது, நாங்கள் ஆற்றிய சாதனையை யாரால் முறியடிக்க முடியும்? எதிர்க் கட்சித் தலைவி ஒரு பெண்ணே ஆனாலும் கூட, அவரது ஆட்சி காலத்தில் பயன் அடைந்த ஒரே பெண்மணி சசிகலா கூட இவர்களைப் போல் எவ்வளவு பயனை அடைந்துவிட்டார்? இதற்கு மேலும் மகளிர் மேம்பாட்டுக்கு, இந்தத் தள்ளாத வயதில் என்ன தான் செய்து விட முடியும்? இதற்கு மேலும் மங்கையர் ஆளுங்கட்சிக்கு வோட்டுப் போடுவதைத் தவிர்ப்பார்களே ஆனால், அவர்கள் குலம் விளங்கத் தான் செய்யுமா? அதனால், சுயமரியாதைத் தமிழனான என்னை தயவு செய்து எனது கொள்கைக்கு மாறாக சாபம் விட வைத்துவிடாமல், பெண்களே, தங்களது பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஆளுங்கட்சிக்கும், உள்ளடி வேலைகளில் சிக்காத கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் பதிவு செய்திடுவீர். அப்படிப் பதிவு செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. வேறு யாராவது உங்கள் சார்பில் உங்கள் வோட்டைப் பதிவு செய்திருந்தாலும், தயவு செய்து, அதனைப் பற்றி ஜெயா தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்காதீர்...

தொழில் வளம் - தம்பி மாறன் (அய்யா, அவர் பேரன் இல்லையான்னு கேக்கலாம்... நான் தான் ஸ்டாலினையே தம்பின்னு தானே சொல்றேன்...), விமானப் போக்குவரத்து நிறுவனத்தை வாங்கியிருக்கிறார். "Cloud Nine", மற்றும் "Red Giant" என்று சுத்தத் தமிழில் பட நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டி, மானிய விலையில் உழைக்கும் வர்க்கத்துக்கு சினிமா காட்டுவதை, சமூக சேவையாகவே கருதிச் செய்துவருகிறார்கள் என் பேரன் மார்கள். சூப்பர் ஸ்டார், அருமைத் தம்பி ரஜினிகாந்த் (அவர் வாய்ஸ் குடுத்தாலும் குடுக்காட்டியும், எனக்குத் தம்பி தாம்பா) அவர்களை வைத்து, இவ்வளவு கம்மியான பொருட்செலவில் வேறு யாராலாவது இவ்வளவு தரமான சினிமாவை உருவாக்க முடியுமா என்று உலக மக்கள் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது "Sun Pictures". போலி மருந்து விற்றே, ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு விலையுயர்ந்த கார் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு ஆருயிர் இளவல் மீனாட்சி சுந்தரம் தொழில் வளர்ச்சி பெறவில்லையா? (இவர் பெயரைக் கூறாவிட்டால், எல்லாரும் குடும்ப உறுப்பினர் தானேன்னு கேட்டுடக் கூடாது பாருங்க). கர்பவதியாய் இருக்கும் போது கராக்ரகம் கண்ட திராவிட குல திலகம் சத்தியவாணி முத்து வழி வந்த கழகக் கண்மணி, கனிமொழியின் உதவியோடும், கலகக் கண்மணி நீரா ராடியா துணையோடும், முதலீடே செய்யாமல், நாட்டுக்கு 1,76,000 கோடி நஷ்டம் ஏற்படுத்தி, அவருக்கும், எங்கள் கழகம் பெயரால் இயங்கி வரும் கலைஞர் & கோ நிறுவனத்துக்கும் ஆயிரக் கணக்கான கோடிகளைக் குவிக்கப் பேறுதவி புரிந்து, அதன் விளைவால், இன்று திஹார் சிறையில் வாடி வதங்கும் கழகத்தின் கொ.ப.செ திருவாளர் ஆ, ராசா செய்த அரும்பணியைக் கூறுவதற்குள், எனக்கே விக்கி நெஞ்செல்லாம் அடைத்துவிடும் போல் இருக்கிறது. தமிழகத்தின் கடனை 1,00,000 கோடி சுமையாக ஏற்றியபின் இவ்வளையும் செய்து முடித்த நாங்கள், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்தால், இன்னும் என்னவெல்லாம் செய்திடுவோம் என்று சற்றே சிந்தித்துப் பார்த்து வாக்களியுங்கள். அந்த அம்மையாரால், இவை போன்ற சாதனைகள் சாத்தியமா? இல்லை என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அதனால், தயவு செய்து உங்களிடம் வந்து, இந்தத் தள்ளாத வயதில் தொண்டைத் தண்ணி வற்றக் கூவிக் கூவி பிச்சை எடுக்க வைத்துவிடாதீர்கள் என்று பெரியாரின் பெயரால், அண்ணாவின் பெயரால் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கு - மேயர் தலைமையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை எரித்து, அப்பாவித் தமிழர்கள் மூன்று பேரைக் கொன்று, பேரன்களிடம் பணம் பெற்று சமாதானம் ஆன பின்பு, எவ்வளவு லாவகமாக அந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்து விட்டோம்? அதிகாலையில் நடைபயிற்சிக்குச் சென்ற எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சரைக் கொலை செய்துவிட்டு, அந்த வழக்கிலிருந்து எவ்வளவு லாவகமாகத் தப்பித்து, கொலை செய்தவர்களையே, மத்திய அமைச்சராக்கி, மதுரை மாநகரின் துணை மேயராக்கி அழகு பார்த்திருக்கிறோம்? இரண்டொரு நாட்களுக்கு முன்பு கூட ஸ்பெக்ட்ரம் வழக்கில் அப்ரூவராக இருந்த ராசாவின் பினாமி, ஆருயிர் தம்பி சாதிக் பாஷாவை, அந்த சிரமங்களை எல்லாம் மேற்கொண்டு தன்னையும், தனது குடும்பத்தையும் வருத்திக் கொள்ள மனம் ஒவ்வாமல், இப்பூவுலக வாழ்வில் இருந்து விடுதலை கொள்ளச் செய்தோம். இவ்வளவு தெளிவாக சட்டம் ஒழுங்கை அந்த அம்மையார் ஆட்சி செய்த காலங்களில் பாதுகாத்ததுண்டா? இதற்கு மேலும் எங்களுக்கு ஓட்டுப் போடாவிட்டால், நான் பேச மாட்டேன். எனது உடன்பிறப்புகள் பேசுவதைத் தடுக்கவும் மாட்டேன் என்பதை மனதில் இருத்தி வோட்டுப் போடுங்கள்.

இதுதவிர, மத்தியில் உள்ள ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டு, ஆட்சியாளர்களைப் பாடாய்ப் படுத்திப் பச்சடி வைத்து, நம் மக்களுக்கு வேண்டியதைச் செய்துகொள்வதில், அந்த அம்மாவுக்குத் திறமை பத்தாது. போஸ்ட் ஆபீசையே மக்கள் நாடாத கால கட்டத்தில், நானும் கழகத் தம்பி மார்களும் மட்டும் மத்திய அரசுக்குக் கடிதங்களும் தந்திகளும் அனுப்பாவிட்டால், தபால் நிலையங்களே நாட்டில் இயங்க முடியாத அளவுக்குப் போயிருக்கும். இப்படி எங்களுக்கு சம்பதமே இல்லாத துறைகளில் கூடப் பொருளாதார வளர்ச்சி பெற எங்களை விட்டால் உங்களுக்கு வேறு நாதி கிடையாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

- கலைபிரியன்