வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, March 10, 2011

திருவாசகத்தின் சிறப்பு (என்னுடைய முதல் ஆன்மிகம் சார்ந்த படைப்பு)...


என்னடா, ஒரு கனமான சப்ஜெச்டத் தொடரானே, இவன் வயசானவனோன்னு தயவு செய்து நினைத்து விடாதீர்கள், நண்பர்களே. நான் கேள்விப் படுகிற விஷயங்களில், என்னைக் கவர்ந்தவற்றை, எல்லோருக்கும் புரியுமாறு பதிவு செய்ய விரும்பும் ஒரு சாதாரண வலைப் பதிவன் நான்... விஷயத்துக்குப் போவோமா?

திருவாசகம் என்பது ஒவ்வொரு மனிதனும், தன்னைத் தேடத் துணை புரியும் ஒரு சிறந்த படைப்பு. அதனால் தானோ என்னவோ, அதன் பால் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. அதன் முக்கியத்துவம் தெயரியாத வயதில், சிறுவனாக இருக்கும் பொது தேவாரம் கற்ற எனக்குத் சிற்சில திருவாசகப் பதிகங்களும் போதிக்கப் பட்டன. இன்றளவில், அவை என் வழக்கமான பயிற்சியில் இல்லாவிட்டாலும் கூட, அதன் சிறப்பை உணரும் சந்தர்ப்பம், இணைய வானொலி வாயிலாக சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவைக் கேட்கும் போது கிட்டியது. அப்போது தான் எண்ணிக் கொண்டேன், நான் சிறு வயதில் அவற்றைக் கற்று ஓத, எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று. அதனாலேயே, நான் தெரிந்து கொண்ட திருவாசகத்தின் சிறப்பை, சற்று விரிவாகப் பதிவு செய்ய ஆவல்.

"சரி, சரி, உன்னப் பத்தி அளந்தது போதும்"ன்னு சொல்றீங்க. கேட்குது. இதோ, வந்தேன்...

தெரிந்த நிலையிலிருந்து, புரிந்த நிலையின் ஊடாக, உணர்ந்த நிலையை அடையும் பயணமே வாழ்க்கை. இதற்கான ஒரு சிறந்த கையேடே, திருவாசகம். மேலோட்டமாகப் பார்த்தால், இது புரியாது. ஒரு உதாரணத்துடன் பார்ப்போமே:

வீட்டில் ஒரு குழந்தை, பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அம்மா அலுவல் முடிந்து வரும் நேரம். வாசலில் சத்தம் கேட்டவுடன், ஆவலாக எட்டிப் பார்க்கிறது குழந்தை. கவனக் குறைவில், பொம்மை கை நழுவி விழுந்து உடைந்துவிடுகிறது. மிகவும் பிடித்த பொம்மை ஆதலால், குழந்தை அழ ஆரம்பித்து விடுகிறது. அலுவல் செய்த அலுப்புடன் உள் நுழைகிற தாய், "என்னடி ஆச்சு, நீ எப்பவுமே இப்படித்தான், எதுலையுமே கவனம் இல்லையே... இரு இரு, வர்ரேன்..." என்று, தன் மேலாளர் மீதிருக்கும் கோபத்தையும் சேர்த்துக் குழந்தை மீது காட்டிக் கடிந்து கொண்டவாரே, கைப்பையை மேசை மீது வைத்து விட்டு, முகம் கழுவச் சென்று விடுகிறார். முகம் கழுவுகையில், ஒரு நினைப்பு, "ச்சை, ரொம்பத் திட்டீட்டமோ? நம்ம பண்ணாததையா, பாவம் அது பண்ணீருச்சு..." என்று தாய்க்கே உரித்த கரிசனம் தொற்றிக் கொள்கிறது. அதே சமயம், பிடித்தது உடைந்ததை எண்ணி அழத் தொடங்கிய குழந்தை, அம்மா திட்டியதை எண்ணி, "நாம் ஏதோ தவறைச் செய்து விட்டோம்" என்பது புரிந்தும், அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், மேலும் கேவிக் கேவி அழத் தொடங்கியது. தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு. உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த அம்மா, "செல்லம்... இங்க பார்ரா, இதுக்குப் போயா அழுவாங்க... பரவாயில்லடா... வேற பொம்மை வாங்கித் தர்ரேன், அம்மா... இங்க பாரு, அம்மா உனக்கு என்ன வாங்கீட்டு வந்துருக்கேன்னு... டட்டடோய்ன்..." என்று தன் கைப்பையிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து நீட்ட, சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டு அழுகை கலந்த சிரிப்புடன் அதனைப் பற்றிக் கொண்டு அம்மாவை முத்தமிட்டது குழந்தை.

விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை, அம்மா வாங்கிக் கொடுத்த (தனக்கு மிகவும் பிரியமான) பொம்மை உடைந்தது தெரிந்து அழுகிறது. தான் தவறு செய்துவிட்டோம், இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்பதை,  அம்மா கடிந்து கொண்டதன் மூலமாகப் புரிந்து கொள்கிற அந்தக் குழந்தை, வாழ்க்கையில் அனுபவிக்க இன்னும் எவ்வளவோ இருக்க, அந்த பொம்மையையே ஏன் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை, அம்மா சமாதானப் படுத்தியவுடன் உணர்ந்து கொள்கிறது. இந்த உதாரணத்தில், அந்தக் குழந்தையைத் தாய் எப்படித் தெரிந்த நிலையில் இருந்து, புரிந்த நிலை ஊடாக, உணர்ந்த நிலைக்குக் கொண்டு வருகிறாரோ, அப்படித் தான், நாம் வாழ்க்கையில் பயணிக்க வேண்டும். அதற்குத் திருவாசகம் ஒரு சிறந்த கையேடாக விளங்குகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த ஒரு சம்பவம். ஜி. யூ. போப், என்பவர் ஐரோப்பாவிலிருந்து கிறித்துவ மதம் பரப்பும் போதகராகத் தமிழ் நாட்டுக்கு வருகிறார். தமிழ் இலக்கியத்தை ஆர்வத்துடன் கற்ற அவர் திருவாசகத்தைப் படிக்க, அது அவரை ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு சமயத்தில், யாருக்குக் கடிதம் எழுதினாலும், திருவாசகத்திலிருந்து இரண்டு வரிகளை எழுதி, அதன் மொழி பெயர்ப்பையும் எழுதி, அதன் பின்னேயே கடிதத்தை எழுதும் அளவுக்கு ஆர்வம் கொள்கிறார். இருந்தாலும், தனக்கிடப் பட்ட பணியான கிறித்தவ மத போதனையையும் செவ்வனே செய்து வருகிறார். அவரின் மிஷனரி அமைப்பைச் சேர்ந்த மற்றவர்கள், மேலதிகாரிகளான பிஷப்களிடம் இதனைப் பற்றிக் குறை கூற (நம் மத்தைப் பரப்ப வந்தவர், இன்னொரு மதம் சார்த்த இலக்கியப் படைப்பைத் தழுவிக் கொண்டிருக்கிறாரே, என்று), விசாரணைக்காக ஒரு பிஷப்பை நியமித்து, அவரிடம் விளக்கம் கேட்டுச் சொல்லும்படி பணிக்கப் படுகிறார், அந்த பிஷப். பிஷப் தமிழகம் வந்து இவரிடம் விளக்கம் கேட்க, இவர்... "அமருங்கள், உங்களுக்கும் திருவாசகத்தின் சிறப்பை விளக்குகிறேன்" என்று சொல்லி, ஒரு மணி நேரம் விளக்குகிறார். அதனைக் கேட்டுச் சிலிர்த்துப் போன பிஷப், தன்னை நியமித்த மேலதிகரியான பிஷப்பிடம் என்ன சொல்கிறார் தேரியுமா - "வாழ்க்கை பற்றிய, இவ்வளவு அருமையான சைவ இலக்கியப் படைப்பாகிய திருவாசகத்தைக் கரைத்துக் குடித்த பிறகும், போப், சைவத்தைத் தழுவாமல், இன்னும் கிறித்தவராகவே இருப்பதற்கே நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும்..." என்று. அப்பேற்பட்ட, மாற்றாரையும் போற்ற வைக்கும் வல்லமை படைத்த படைப்பு, திருவாசகம்.

வீட்டில் உள்ள வயசானவர்களுக்கு, சின்னவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எங்கே போகிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள அதீதமான ஆர்வம் ஏற்படுவதை, நாம் எல்லோரும் பார்க்கிறோம். (அவர்களது அக்கறை மிகுதி கூட, இதற்குக் காரணமாக இருக்கலாம். தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கருத்தை வலியுறுத்துவதற்காகவே, இதனை ஒரு உதாரணமாக மட்டுமே பதிவு செய்கிறேன்). சமயத்தில், அவ்வளவு வயதாகாதவர்களுக்குக் கூட அடுத்தவர்கள் பற்றிய ஆர்வமிகுதி இருக்கக் கண்டிருக்கிறோம். மொத்தத்தில், அடுத்தவர்கள் பற்றி நாம் அறிய முனைகிற தீவிரத்தில், பத்தில் ஒரு பங்கு நம்மை அறிவதற்குப் பயன்படுத்தினால் கூட வாழ்க்கையையையும், அதனைச் சுற்றி இருக்கும் மாயையையும், மிகவும் எளிதில் புரிந்து கொண்டுவிட முடியும். அந்தப் புரிதல் பெற, அனைவரும் நாட வேண்டிய அருமையான படைப்பு - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். நமச்சிவாயம்...

- கலைபிரியன்

3 comments:

சக்தி கல்வி மையம் said...

தொடருங்கள் நண்பரே...

சமுத்ரா said...

அருமையான பதிவு..நன்றி

Unknown said...

soooper appu. This is another article that proves that you have knowledge and in-depth understanding in many different areas!