வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Friday, March 11, 2011

மனிதனுக்கும் மகாத்மாவுக்கும் என்ன வித்தியாசம்?

இன்று சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவைக் கேட்கும் பொது எனக்கு தலைப்பில் உள்ள கேள்விக்கு விடை கிட்டியது... என்னுடைய அறிவுக்கு எட்டிய சில தகவல்களையும் உதாரணங்களாக இணைத்துப் பதிவு செய்ய முற்பட்டுள்ளேன்...

"எவன் ஒருவன் இன்பத்தையும் துன்பத்தையும் சம நிலையில் வைத்துப் பார்க்கப் பழகுகிறானோ, அவனே வாழ்வில் உன்னத நிலையை அடைகிறான்" என்று பகவத் கீதை கூறுகின்றது... இந்தக் கருத்துக்கு எடுத்துக் காட்டுக்களாக கீழ் வரும் விஷயங்களைப் பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தில், கம்பன் மிக அழகாக இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார்...
"மேனி மெய்த்திருப் பதம் மேவு..." - இது தயரதன் "ராஜ்ஜியம் உனக்கே, அரச கோலம் பூண்டுகொள் மகனே..." என்று ராமனிடம் சொல்லவதாகக் கம்பன் எழுதுவது...
"இத் திருத் துறந்து ஏகு..." இது சித்தி கையேயி "ராஜ்ஜியம் உனக்கில்லை, இக்கோலத்தைத் துறந்து காட்டுக்குச் செல்" என்று ராமனிடம் சொல்வதாகக் கம்பன் எழுதுவது...
இந்த இரு செய்திகளைக் கேட்கும் போதும் ராமனுடைய முகம் எவ்வாறு ஒரே போல் சலனமில்லாமல் இருந்ததாம் தெரியுமா? (இங்கு தான், கம்பன் கற்பனை வளத்தையும் விஞ்சிய, ஒரு உன்னதக் கவிஞனாய் நிற்கிறான்) "சித்திரம் மலர்ந்த செந்தாமரை அன்ன..." இரண்டு நிலையிலும் ராமனின் முகம் ஓவியத் தாமரை போல இருந்தது என்கிறார் கம்பர்... எப்போதும், மென்மையான, சலனமில்லாத தாமரை போன்ற முகமுடையவன் ராமன் என்று மட்டும் கூடச் சொல்லியிருக்கலாம் கம்பநாடன்... உண்மையான தாமரை மலர் கூட வாடி விடும்... ஆனால், ஓவியத்தில் எழுதப் பட்ட தாமரை எப்படி வாடாமல் என்றும் ஒரே நிலையில் இருக்கிறதோ, அவ்வாறே, ராமனின் முகமும் இரண்டு நிலையிலும் மாற்றம் இல்லாமல் ஒளி பொருந்தியதாக இருந்தது என்பதை, இதனை விட அழகாக யாரால் இயம்ப முடியும்?

இதனையே, கண்ணதாசன் பின்வருமாறு தனது திரை இசைப் பாடல் ஒன்றில் குறிப்பிடுகிறார்...
"... புகழ்ந்தால் எனக்குப் புல்லரிக்காது
இகழ்ந்தால் என் அகம் உள் எரிக்காது
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் புழுதி வாரித் தூற்றட்டும்..."
ராமனையும் ராமாயணத்தையும் நம்பாதவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதனால், காமராஜர் வாழ்வில் நடந்த இரு சம்பவங்களை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம்... ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலகியதும், காமராஜர் முதல்வராக அமரவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். அகில இந்தியக் காங்கிரஸ்சின் விருப்பமும் அதுவே. காமராஜரிடம் அவ்விருப்பத்தை எடுத்துச் செல்கிறார்கள். அவர், சற்றும் சலனமில்லாமல், தான் பதவி வகிக்க சம்மதிக்கவேண்டுமானால் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிப் பட்டியலிட்ட கோரிக்கைகள் - "ராஜாஜி அமைச்சரவையில் 12 அமைச்சர்கள் இருந்தார்கள். என் அமைச்சரவையில் எட்டு பேர் தான் இருக்க வேண்டும். அவருக்குக் கொடுங்கள், இவருக்குக் கொடுங்கள் என்று சிபாரிசு செய்யக் கூடாது. ராஜாஜியை எதிர்ப்பவர்களை அமைச்சரவையில் வைத்திருக்க மாட்டேன்..." என்று மேலும் சில உன்னதமான கோரிக்கைகளை வைக்க, அவை ஏற்கப் பட்டு முதல்வராகிறார். அதே போல 1967 பொதுத் தேர்தலில் அண்ணா தலைமையிலான தி.மு.க கூட்டணி, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ்சை வீழ்த்துகிறது. மன்றாடியார், கக்கன் போன்ற மூத்த அமைச்சர்கள் தொற்றதோடல்லாமல், விருதுநகர் தொகுதியில் காமராஜரே தோற்றுப் போகிறார் (தி.மு.க வைச் சார்ந்த சீனிவாசன் என்ற 28 வயது இளைஞரிடம்). வீட்டுக்குள் வானொலியில் தேர்தல் முடிவுகளைக் கேட்ட படி சலனமில்லாமல் அமர்ந்து கொண்டிருந்த காமராஜரிடம், தொண்டர் ஒருவர் ஆற்ற மாட்டாமல் சொல்கிறார் - "அய்யா, நீங்க தோத்துப் போயிட்டத வேட்டுப் போட்டுக் கொண்டாடுறாங்க... எங்களால பொருக்க முடியல..." என்று. அதற்குக் காமராஜர் சிரித்துக் கொண்டே சொல்கிறார் - "எலேய், நான் ஜெயிச்சுருந்தா, நீ வேட்டுப் போட்டிருப்பேல்ல... அவனுவ ஜெயிச்சுட்டானுவ, வேட்டுப் போடுரானுவ... போய் வேலையைப் பாரு வே..." என்று. பதவி தேடி வரும் போதும், தோற்றுப் போய், பதவியைத் துறக்கும் போதும் ஒரே மாதிரியான சலனமில்லாத பக்குவம், அவர் போல், வேறு யாருக்கு வரும். அதனால் தான், அவருக்குப் பின்னால் இன்றுவரை, யாருக்கும் காமராஜர் ஆட்சியைக் கொடுக்க இயலவில்லை. அவரது பெயரைக் கூறி அரசியல் செய்யும், இன்றைய அரசியல்வாதிகள் யாராவது, அவரைப் போல, பதவி வரும் போதும், போகும் போதும் சம நிலையில், தங்களை வைத்துக் கொள்வார்களா?

ராமபிரான் வழியில், கண்ணதாசன் பாமரனுக்குப் புரியவைத்த, அந்த உன்னத நிலையை, அவர் அடைந்ததனாலேயே, கர்ம வீரர் என்று இன்றும் காமராஜர் புகழை நாம் பாடிக் கொண்டிருக்கிறோம்.

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்று ஏசுபிரான் விவிலியத்தில் கூறுகிறார். தவறு செய்பவர்களுக்கு மறு வாய்ப்பாகப், பாவ மன்னிப்பு வழங்கும் பழக்கம் இன்றும் கிறித்தவ தேவாலயங்களில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

புத்தர் வாழ்வில் கூட, இதற்கு ஒத்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒரு ஊரில், புத்தர், தன் சீடர் ஆனந்தர் என்பவருடன் சென்று கொண்டிருக்கிறார். அந்த வழியில் வந்த ஒரு விறகுவெட்டிக்கு புத்தர் மீது ஏனோ, அளவு கடந்த கோபம். கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற அவன், புத்தரை வழி மறித்து, அவர் முகத்தின் மீது காரி உமிழ்ந்து விடுகிறான். புத்தர், எந்த வித சலமுமின்றி அவனிடம் பரிவாகக் கேட்டார் - "ஏனப்பா, உனக்கு என்னிடத்தில் ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று. ஆனந்தன் சற்றே உணர்ச்சிவசப்பட்டு, "குருவே, அவனை என்னிடத்தில் விடுங்கள், நான் கேட்டுச் சொல்கிறேன்..." என்று சொல்ல, புத்தர் சொல்கிறார் - "ஆனந்தா, அவர் என்னிடம் ஏதோ சொல்லப் பிரியப் பட்டிருக்கிறார். அதனைச் சொல்ல அவரது மொழியில் வார்த்தை இல்லாத பலவீனம். இவ்வாறு செய்து விட்டார். மொழியின் பிழைக்கு, இவர் என்ன செய்வார், பாவம்..." இதைச் சொல்லிவிட்டுக் கருணை பொங்கும் அவருடைய பார்வையை அவன் மீது பதித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். வீடு சென்ற விறகு வெட்டிக்கு இரவு முழுக்க உறக்கம் வரவில்லை. எப்படிப் புரண்டு படுத்தாலும், புத்தருடைய கருணையான முகமே, அவனை ஆட்கொண்டிருக்கிறது. மறுநாள் காலை, புத்தர் ஆற்றங்கரையில் குளித்துவிட்டுத் திரும்புகையில், வேக வேகமாக ஓடி வந்து, அவர் காலடியில் விழுந்து கால்களைப் பற்றிக் கொண்டு கதறி அழுகிறான் அந்த விறகுவெட்டி. இதனை வியப்பாகப் பார்த்த ஆனந்தனிடம், புத்தர் மறுபடி சலனப் படாமல் சொல்கிறார்... "ஆனந்தா, அவர் என்னிடம் ஏதோ சொல்லப் பிரியப் பட்டிருக்கிறார். அதனைச் சொல்ல அவரது மொழியில் வார்த்தை இல்லாத பலவீனம். இவ்வாறு செய்து விட்டார். மொழியின் பிழைக்கு, இவர் என்ன செய்வார், பாவம்...". இதைக் கேட்ட விறகுவெட்டி, எழுந்து, "அடியேனை மன்னித்தீர்கள் என்று தயவு செய்து தாங்கள் திருவாய் மலரவேண்டும்" என்று அழுது கொண்டே கேட்கிறார். புத்தர் பதிலுரைக்கிறார் - "நீ நேற்றிருந்த நிலையில் இன்றில்லை. இன்று நீ பிழையே செய்யாமல் இருக்கும் போது, நேற்றே முடிந்து போன ஒரு விஷயத்திற்காக உன்னை நான் மன்னிக்க வேண்டிய அவசியம் எழ வில்லை" என்று.

புத்தர், ஏசு போல தன்னைத் துன்புருத்தியவர்களைக் கூடத் தனது அஹிம்சை வழியில் கவர்ந்து, நம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார் தேச பிதா மகாத்மா காந்தி என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதனாலேயே, அவரை மகாத்மா என்று அழைத்து வணங்குகிறோம்.

இன்னா செய்தாரை ஒருத்தர், அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்

என்று வாய் மொழிகிறான் வள்ளுவன்.

அன்னை தெரசா, தன்னுடைய கருணை இல்லத்துக்கு நன்கொடை வேண்டி ஒரு பணக்காரரிடம் கை ஏந்துகிறார். அந்தச் சீமான், வெறுப்பாய்க் காறி அன்னையின் கையில் உமிழ்ந்து விட, அந்தக் கையைப் பின்னால் வைத்துக் கொண்டு, இன்னொரு கையை நீட்டியவாறே அன்னை கேட்கிறார் - "பரவாயில்லை. அதனை எனக்காக வைத்துக் கொள்கிறேன், கருணை இல்லத்துக்கு ஏதாவது நன்கொடை கொடுங்கள்..." என்று. கோபத்தில் அந்தச் சீமானின் முகத்தில் அறைந்திருந்தால் கூட, இவ்வளவு தெளிவாக அன்னையின் நோக்கத்தை அவரால் புரிந்து கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு ஆழமாக அன்னையின் கருணை முகம், இச்செயல் மூலம் அவரது ஆழ் மனதில் பதிந்திருக்கும்.

புத்தன் வழி, ஏசு வழி, ராமபிரான் வழி, வள்ளுவன் வழி - கீதை போதித்த உன்னத நிலையை அடைந்ததன் மூலம், நமது சம காலத்தில் இல்லாவிட்டாலும், நாம் நன்கு அறிந்த தலைவர்களான அண்ணல் காந்தியடிகளும், கர்ம வீரர் காமராஜரும், அன்னை தெரசாவும் எப்படி உன்னத நிலையை அடைந்தார்கள் என்பது மேற்குறிப்பிட்டுள்ள உதாரணங்கள் மூலம் உள்ளங்கை நெல்லிக் கனியைப் போல் புலப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

அளவுக்கு அதிகமாக இனிப்பு உட்கொண்டால், சர்க்கரை நோய் வருகிறது. அளவுக்கு அதிகமாய் உப்பை உட்கொண்டால், ரத்த அழுத்தம் வருகிறது. மருத்துவர் அறிவுரைப் படி நாமும் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறோம். ஆனால், அளவுக்கு அதிகமான இன்பத்தையும், துன்பத்தையும் மட்டும் ஏன் நம்மால் உட்கொள்வதை நிறுத்த முடியவில்லை. இனியாவது முயற்சி செய்யலாமே?

- கலைபிரியன்

2 comments:

kala said...

Awesome...........

kala said...

Awesome.........Great work,Keep it up.