வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Friday, March 18, 2011

கலைஞரின் கடந்த ஐந்தாண்டு ஆட்சி கால சாதனைகள்... தேர்தல் பிரசாரம் தேவையா?


இன்றைய ஆளுங்கட்சி கடந்த ஐந்தாண்டுகளில் செய்த அரும் பெரும் சாதனைகள் தான் எத்தனை எத்தனை... நாங்கள் வோட்டுக் கேட்டு வர வேண்டிய அவசியமே இல்லை... வாக்காளர்களே, தத்தம் வோட்டுக்களை எங்களுக்கும், எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டுவிடும்படியான சாதனைப் பட்டியல், இதோ...

மகளிர் மேம்பாடு - தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், கனிமொழி, கயல்விழி, எழிலரசி, பூங்கோதை ஆலடி அருணா, தேன்மொழி கோபிநாதன், குஷ்பூ, விஜயா தாயன்பன், இந்திரகுமாரி போன்ற கஞ்சிக்கு வழியில்லாத இன்னும் எவ்வளவோ திராவிட குலவிளக்குகளை, மகளிர் குல மாணிக்கங்களைப் பெருமைப் படுத்திக் கோடிகள் புரளும் கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் அமரச் செய்யது, நாங்கள் ஆற்றிய சாதனையை யாரால் முறியடிக்க முடியும்? எதிர்க் கட்சித் தலைவி ஒரு பெண்ணே ஆனாலும் கூட, அவரது ஆட்சி காலத்தில் பயன் அடைந்த ஒரே பெண்மணி சசிகலா கூட இவர்களைப் போல் எவ்வளவு பயனை அடைந்துவிட்டார்? இதற்கு மேலும் மகளிர் மேம்பாட்டுக்கு, இந்தத் தள்ளாத வயதில் என்ன தான் செய்து விட முடியும்? இதற்கு மேலும் மங்கையர் ஆளுங்கட்சிக்கு வோட்டுப் போடுவதைத் தவிர்ப்பார்களே ஆனால், அவர்கள் குலம் விளங்கத் தான் செய்யுமா? அதனால், சுயமரியாதைத் தமிழனான என்னை தயவு செய்து எனது கொள்கைக்கு மாறாக சாபம் விட வைத்துவிடாமல், பெண்களே, தங்களது பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஆளுங்கட்சிக்கும், உள்ளடி வேலைகளில் சிக்காத கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் பதிவு செய்திடுவீர். அப்படிப் பதிவு செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. வேறு யாராவது உங்கள் சார்பில் உங்கள் வோட்டைப் பதிவு செய்திருந்தாலும், தயவு செய்து, அதனைப் பற்றி ஜெயா தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்காதீர்...

தொழில் வளம் - தம்பி மாறன் (அய்யா, அவர் பேரன் இல்லையான்னு கேக்கலாம்... நான் தான் ஸ்டாலினையே தம்பின்னு தானே சொல்றேன்...), விமானப் போக்குவரத்து நிறுவனத்தை வாங்கியிருக்கிறார். "Cloud Nine", மற்றும் "Red Giant" என்று சுத்தத் தமிழில் பட நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டி, மானிய விலையில் உழைக்கும் வர்க்கத்துக்கு சினிமா காட்டுவதை, சமூக சேவையாகவே கருதிச் செய்துவருகிறார்கள் என் பேரன் மார்கள். சூப்பர் ஸ்டார், அருமைத் தம்பி ரஜினிகாந்த் (அவர் வாய்ஸ் குடுத்தாலும் குடுக்காட்டியும், எனக்குத் தம்பி தாம்பா) அவர்களை வைத்து, இவ்வளவு கம்மியான பொருட்செலவில் வேறு யாராலாவது இவ்வளவு தரமான சினிமாவை உருவாக்க முடியுமா என்று உலக மக்கள் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது "Sun Pictures". போலி மருந்து விற்றே, ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு விலையுயர்ந்த கார் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு ஆருயிர் இளவல் மீனாட்சி சுந்தரம் தொழில் வளர்ச்சி பெறவில்லையா? (இவர் பெயரைக் கூறாவிட்டால், எல்லாரும் குடும்ப உறுப்பினர் தானேன்னு கேட்டுடக் கூடாது பாருங்க). கர்பவதியாய் இருக்கும் போது கராக்ரகம் கண்ட திராவிட குல திலகம் சத்தியவாணி முத்து வழி வந்த கழகக் கண்மணி, கனிமொழியின் உதவியோடும், கலகக் கண்மணி நீரா ராடியா துணையோடும், முதலீடே செய்யாமல், நாட்டுக்கு 1,76,000 கோடி நஷ்டம் ஏற்படுத்தி, அவருக்கும், எங்கள் கழகம் பெயரால் இயங்கி வரும் கலைஞர் & கோ நிறுவனத்துக்கும் ஆயிரக் கணக்கான கோடிகளைக் குவிக்கப் பேறுதவி புரிந்து, அதன் விளைவால், இன்று திஹார் சிறையில் வாடி வதங்கும் கழகத்தின் கொ.ப.செ திருவாளர் ஆ, ராசா செய்த அரும்பணியைக் கூறுவதற்குள், எனக்கே விக்கி நெஞ்செல்லாம் அடைத்துவிடும் போல் இருக்கிறது. தமிழகத்தின் கடனை 1,00,000 கோடி சுமையாக ஏற்றியபின் இவ்வளையும் செய்து முடித்த நாங்கள், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்தால், இன்னும் என்னவெல்லாம் செய்திடுவோம் என்று சற்றே சிந்தித்துப் பார்த்து வாக்களியுங்கள். அந்த அம்மையாரால், இவை போன்ற சாதனைகள் சாத்தியமா? இல்லை என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அதனால், தயவு செய்து உங்களிடம் வந்து, இந்தத் தள்ளாத வயதில் தொண்டைத் தண்ணி வற்றக் கூவிக் கூவி பிச்சை எடுக்க வைத்துவிடாதீர்கள் என்று பெரியாரின் பெயரால், அண்ணாவின் பெயரால் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கு - மேயர் தலைமையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை எரித்து, அப்பாவித் தமிழர்கள் மூன்று பேரைக் கொன்று, பேரன்களிடம் பணம் பெற்று சமாதானம் ஆன பின்பு, எவ்வளவு லாவகமாக அந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்து விட்டோம்? அதிகாலையில் நடைபயிற்சிக்குச் சென்ற எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சரைக் கொலை செய்துவிட்டு, அந்த வழக்கிலிருந்து எவ்வளவு லாவகமாகத் தப்பித்து, கொலை செய்தவர்களையே, மத்திய அமைச்சராக்கி, மதுரை மாநகரின் துணை மேயராக்கி அழகு பார்த்திருக்கிறோம்? இரண்டொரு நாட்களுக்கு முன்பு கூட ஸ்பெக்ட்ரம் வழக்கில் அப்ரூவராக இருந்த ராசாவின் பினாமி, ஆருயிர் தம்பி சாதிக் பாஷாவை, அந்த சிரமங்களை எல்லாம் மேற்கொண்டு தன்னையும், தனது குடும்பத்தையும் வருத்திக் கொள்ள மனம் ஒவ்வாமல், இப்பூவுலக வாழ்வில் இருந்து விடுதலை கொள்ளச் செய்தோம். இவ்வளவு தெளிவாக சட்டம் ஒழுங்கை அந்த அம்மையார் ஆட்சி செய்த காலங்களில் பாதுகாத்ததுண்டா? இதற்கு மேலும் எங்களுக்கு ஓட்டுப் போடாவிட்டால், நான் பேச மாட்டேன். எனது உடன்பிறப்புகள் பேசுவதைத் தடுக்கவும் மாட்டேன் என்பதை மனதில் இருத்தி வோட்டுப் போடுங்கள்.

இதுதவிர, மத்தியில் உள்ள ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டு, ஆட்சியாளர்களைப் பாடாய்ப் படுத்திப் பச்சடி வைத்து, நம் மக்களுக்கு வேண்டியதைச் செய்துகொள்வதில், அந்த அம்மாவுக்குத் திறமை பத்தாது. போஸ்ட் ஆபீசையே மக்கள் நாடாத கால கட்டத்தில், நானும் கழகத் தம்பி மார்களும் மட்டும் மத்திய அரசுக்குக் கடிதங்களும் தந்திகளும் அனுப்பாவிட்டால், தபால் நிலையங்களே நாட்டில் இயங்க முடியாத அளவுக்குப் போயிருக்கும். இப்படி எங்களுக்கு சம்பதமே இல்லாத துறைகளில் கூடப் பொருளாதார வளர்ச்சி பெற எங்களை விட்டால் உங்களுக்கு வேறு நாதி கிடையாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

- கலைபிரியன்

1 comment:

ramalingam said...

//எங்களை விட்டால் உங்களுக்கு வேறு நாதி கிடையாது//
உங்களை விட்டால் எங்களுக்கு என்றிருக்க வேண்டும்.