வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, March 16, 2011

சாதிக் பாஷா தற்கொலை மற்றும் ம.தி.மு.க புறக்கணிப்பு - கிழியும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வின் முகத்திரை...

தமிழகத்தின் இன்றைய தலைப்புச் செய்திகளாக இடம் பிடிக்கும் இரண்டு செய்திகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வின் பச்சை சந்தர்ப்பவாதத்தைப் படம் பிடித்துக் காட்டுபவையாக அமைந்துள்ளன.

முதலாவதாக, முன்னாள் மத்திய மந்திரியும், இந்நாள் திஹார் சிறைக் கைதியுமான, ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும் (அவரது பினாமி எனக் கருதப் படும்), ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ ஆல் விசாரிக்கப் பட்டவருமான சாதிக் பாஷாவின் தற்கொலையைப் பார்க்கலாம். "ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அப்ரூவராக மாறப் போகிறார்" என்றும் "இன்று தில்லிக்குச் செல்ல விமான டிக்கட் எடுத்து வைத்திருந்தார்" எனவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட சாதிக் பாஷா திடீர் திருப்பமாகத் தனது படுக்கையறையில், இன்று காலை, தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். ராசாவின் குடும்பத்தினர், அவர் மந்திரியாகப் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு துவங்கிய "கிரீன் ஹவுஸ்" கட்டுமான நிறுவனத்தில் பங்குதாரராகவும், நிறுவனத்தை நடத்தும் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் இந்த சாதிக் பாஷா என்பதும், சில லட்சங்கள் முதலீட்டுடன் தொடங்கப் பட்ட இந்நிறுவனம், துவங்கிய மிகக் குறுகிய காலத்துக்குள், இன்று சுமார் 600 கோடி மதிப்புப் பெற்றது எனவும் செய்திகள் கசியத் தொடங்கியபோது, அனைவருக்கும் தலை சுற்றித் தான் போனது. அவ்வாறு சேகரிக்கப் பட்ட பணம் பெரும்பாலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக தொலை தொடர்பு நிறுவனங்கள் ராசாவுக்கு ஹவாலா முறையில் கையூட்டாகக் கொடுத்த பணம் என்று சிபிஐ சந்தேகக் கணை தொடுக்க, அதன் விசாரணை வளையத்துக்குள் சிக்கி ஒரு வழியாகத் தான் போனார் சாதிக் பாஷா.

ஒரு வேளை, இவர் தற்கொலை செய்து கொள்ளாமல் அப்ரூவர் ஆக மாறி இருந்தால், இன்னும் யார் யார் எல்லாம் இவ்விவகாரத்தில் சிக்கியிருக்கக் கூடும்? அப்படி ஆகாமல் போனதால், யார் யார் காப்பாற்றப் படுகிறார்கள்? இவர் தற்கொலை செய்து கொண்டதில், தங்களைக் காத்துக் கொள்வதற்காக, அதிகார வர்க்கத்தின் தூண்டுதல் ஏதாவது உள்ளதா? என்னதான் சட்டப் பூர்வமற்ற காரியங்களில் தலையைக் கொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு அவர் வந்திருந்தாலும், அவரது மனைவிக்கும், இளம் குழந்தைகளுக்கும், ஒரு குடும்பத் தலைவனாக இருக்க வேண்டிய பொறுப்பை அவர் இழந்ததற்கு யார் பொறுப்பு என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி...

தி.மு.க சம்மந்தப் பட்ட பினாமி விவகாரங்களில் இது ஒன்றும் புதிதல்ல. சில வருடங்களுக்கு முன் ஸ்டாலினின் பினாமி என்று வர்ணிக்கப் பட்ட ரமேஷ் கார்ஸ் "ரமேஷ்", மிகக் குறுகிய காலத்துக்குள் தொழில்முறையில் அசுர வளர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். திடீர் என்று, என்ன ஆனதோ, ஏதானதோ, குடும்பத்துடன் (பச்சிளங்குழந்தை உட்பட) விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். தலைவரின் ஒரு வாரிசுக்காக அன்று ரமேஷ் பலிகடா ஆக்கப் பட்டார் என்றால், இன்று சாதிக் பாஷாவும் தலைவரின் இன்னொரு வாரிசுக்காக பலிகடா ஆக்கப் பட்டிருக்கிறார் என்றல்லவா அர்த்தம்? இந்த அவலங்களுக்கு முடிவே இல்லையா?

அரசியல் அதிகாரம் நிரம்பியவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அவர்களுக்குத் தேவை எனும் பொழுது யாரை வேண்டுமானாலும் எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கு ஆபத்து நேரும்போது இவ்வாறு அவர்கள் குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்துவது என்பது பச்சை சந்தர்ப்பவாதம் இல்லையா? என்ன தான் தீய வழியில் செல்வம் சேர்க்கத் துணை போனவர்கள் என்றாலும், எய்தவன் இருக்க அம்பை மட்டுமே பதம் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

பினாமிகளாக இருப்பவர்களும் தொலை நோக்குப் பார்வை அற்றவர்களாக இருப்பதுதான், இதில் வேதனை. சில ஆயிரம் கையில் இருக்கும் போது இவர்கள் வாழ்ந்த நிம்மதியான வாழ்க்கை, சில லட்சங்கள் சில கோடிகள் கையில் எளிதாகப் புரள ஆரம்பிக்கும் போது பஞ்சாய்ப் பறந்துவிடுகின்றது என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். சிபிஐ, உச்சநீதிமன்றம் போன்ற தனி அதிகாரம் படைத்த அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட்டு, இப்படிப்பட்ட விஷயங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்.

இரண்டாவது, தனது நீண்ட நாள் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க வைப் புறக்கணித்துவிட்டுத் தன்னிச்சையாகத் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அம்மையார் வெளியிட்டிருக்கிறார் என்ற செய்தி. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறியும், சினிமாவில் நடித்த விளம்பரத்தையும், சாதியப் பின்னணி கொண்டும் கட்சி நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் முதல் மரியாதையுடன் தொகுதிப் பங்கீட்டின் போது பந்தி பரப்பிவிட்டு, வெற்றி, தோல்வி கருதாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக, கடைமட்ட அ.தி.மு.க தொண்டனைவிட அதிகமாகத் தன் புகழைப் பரப்பி வந்த பிரசார பீரங்கி, கொள்கைக் குன்று, புரட்சிப் புயல் வைகோ அவர்களின் கட்சியான ம.தி.மு.க வைக் கேவலமான முறையில் உதாசீனப் படுத்திவிட்டுத் தேர்தல் களம் காணப் புறப்பட்டுவிட்டார் அம்மையார். யாரும் தன்னுடன் கூட்டு வைக்கவே அஞ்சும் காலத்திலும், தன்னால் அவமானப் பட்ட பின்னரும், தனது உற்ற தோழமையை நல்கி உழைத்த ஒரு உன்னதமான மனிதருக்கும், தோல்விகளை மட்டுமே சுவைத்துக் களைத்தும், அவர் பின்னால் விலை போகாமல் நிற்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் இன்னும் வசந்த காலம் என்பது வெகு தூரம் என்றாகிவிட்டது. இது, ஏற்கனவே இது போன்ற புறக்கணிப்புக்களுக்குப் பெயர் போன, இன்றைய அ.தி.மு.க வின் பச்சை சந்தர்ப்பவாதத்துக்கு மற்றும் ஓர் உதாரணம் என்பதில் ஐயமில்லை.

இது போன்ற சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்குத் தான் வாக்காளர்களின் உள்ளங்களிலும் இடம் என்பது தான் இன்றைய ஜனநாயகத்தின் அவலமான நிலையாகிவிட்டது.

மற்ற ஈன அரசியல்வாதிகளைப் போல் இல்லாமல், கொள்கை மாறாமல் முழக்கமிட்டுவந்த வைகோ அவர்கள், இனியேனும் மற்றவர்களைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தன் கட்சியின் அங்கீகாரத்துக்கும், கட்சியினரின் பதவிகளுக்கும் ஒரு சில சமரசங்களைச் செய்து கொள்ள அவர் இனியும் தயங்கினார் என்றால், இன்றைய நிலையில், இனிமேலும் கட்சியை நடத்துவது மிகவும் கடினம்.

அதே சமயம் திருந்துவதற்குத்  திரும்பத் திரும்ப சந்தர்ப்பம் கிட்டினாலும், அவற்றைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு தான் அரசியல் நடத்துவேன் என்று அம்மையார் அவர்களும் தொடர்ந்து தனது செய்கைகள் மூலமாக நிரூபிப்பாரே ஆனால், அவரது கட்சிக்கும் அது நல்லதல்ல என்பதை அவரும் என்றாவது உணரத் தான் வேண்டும்.

- கலைபிரியன்

பெரியாரின் பகுத்தறிவும் இன்றைய அரசியல் சூழ்நிலையும்...


பெரியார் பகுத்தறிவு குறித்து, ஒரு முறை, இப்படிப் பேசி இருக்கிறார் - "பகுத்தறிவு என்றால் என்ன? அறிவும் பகுத்தறிவும் வெவ்வேறாக இருக்க முடியாது. புலப் படுகின்ற விஷயத்தை அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து வல்லமை அடையும் பொழுது பகுத்தறிவு பிறக்கிறது" என்று. அதற்கு உதாரணமாக ஒரு கதையையும் கூறுகிறார் - குருவிடம் சீடன் வந்து கேட்கிறான், "குருவே, அறிவு என்றால் என்ன, விதி என்றால் என்ன?" என்று. குரு சொல்கிறார், "நான் சொல்வதைச் செய். பிறகு உனக்கு புலப் படும்", என்று. முதலில் ஒரு காலைத் தூக்கச் சொல்கிறார். அவ்வாறே தூக்கிவிட்டு, இன்னொரு காலால் நிற்கிறான் சிஷ்யன். அடுத்ததாக, அந்தக் காலையும் தூக்கச் சொல்கிறார். குரு சொல்வதைத் தட்ட முடியுமா. அதையும் அவன் எம்பித் தூக்க, "தடால்" என்று கீழே விழுகிறான். இப்போது, குரு சொல்கிறார், "ஒரு காலைத் தூக்கினால், இன்னொரு காலால் நிற்க முடியும் என்று உனக்குத் தெரிந்திருக்கிறது. இது அறிவு. இன்னொரு காலைத் தூக்கினால், நிற்க முடியாது என்று தெரிந்தும், நான் சொல்லியதால் செய்தாய் அல்லவா, இது விதி" என்று.

பெரியாரின் பாசறையில் உருவாகிப் பிளவு கண்டு உதித்த கட்சிகள் தான் தமிழ் நாட்டைப் பல்லாண்டு காலமாக ஆண்டு வருகின்றன. அவை தான் வரும் தேர்தலிலும் பிரதானக் கட்சிகளாகப் போட்டி போட இருக்கின்றன. அதில் ஒன்று பெரியாரின் பகுத்தறிவு சார்ந்த விஷயங்களைக் கை கழுவி வெகு நாட்கள் ஆகிவிட்டன. அதனை வெளிப்படியாகப் பிரகடனம் செய்யாத ஒன்றே குறையாகப் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது அந்தக் கட்சி. மற்றொன்று, இன்றைய ஆளும் கட்சி. தனக்கு வசதிப் படும் போது பகுத்தறிவுக் கொள்கைகளைப் பிரசாரம் செய்வதும், இல்லாத போது, இலை மறை, காய் மறையாக மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கி முத்தெடுப்பதுமாய் சிறப்பாகக் கட்சி/ஆட்சி நடாத்திக் கொண்டிருக்கிறது. வருணாசிரமத்தை முற்றும் எதிர்த்த பெரியாரின் விரல் பற்றி அரசியல்/திராவிடம் கற்றதாகப் பெருமை பேசிக்கொள்ளும் அதன் தலைவர், கட்சியையும் ஆட்சியையும் வாரிசுகளுக்கு உயில் எழுதி வைக்காதது ஒன்று தான் பாக்கி. இது வருணாசிரமம் இல்லையா என்று யாராவது கேட்டால், அவர்களை "ஆரியவாள்" என்றும் "பார்ப்பன ஏகாதிபத்தியம் பரப்புவோர்" என்றும் எள்ளி நகையாடுவதில் மட்டுமே அவரது முத்தமிழ் மூளை இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பதை விட, யாரை ஆட்சியில் மறுபடி அமர்த்தக் கூடாது என்று தான் பார்க்க வேண்டிய அவல நிலை வாக்காளர்களுக்கு. அவர்களுக்கும் பெரியார் சொல்லிய கதை ஒரு வகையில் பொருந்தும். ஸ்பெக்ட்ரம் தொடங்கி, ஊழல், வாரிசு அரசியல், கட்டப் பஞ்சாயத்து, மணற்கொள்ளை, நில அபகரிப்பு என எல்லா விஷயங்களையும் டீக்கடை தொடங்கிப் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்சாதனையூட்டப் பட்ட அறைகள் வரை பின்னிப் பெடல் எடுக்கும் அளவுக்கு அரட்டைக் கச்சேரிகளில் வல்லவர்களான வாக்காளர்கள், அறிவு படைத்தவர்கள் தான். இருந்தாலும், வாக்களிக்கும் போது, வாங்கிய பணத்தையும், வேட்பாளரின் சாதியப் பின்னணியையையும், தேர்தல் அறிக்கையின் இலவசக் கவர்ச்சித் திட்டங்களையும், இன்ன பிற விஷயங்களையும் எண்ணித் தங்களுடைய ஓட்டை வீணடிப்பது தான் அவர்களின் விதி.

- கலைபிரியன்

Monday, March 14, 2011

அகவை கடந்து நிற்கும் அற்புதம்!!!


நடை தளர்ந்து, முடியில் நரை விழுந்தும்...
திடம் குறைந்து, விழியில் திரை படர்ந்தும்...
வாடா மலர் போல், வளமாய் இருப்பதுவே...
அகவை கடந்து நிற்கும் - அற்புதக் காதல்!!!

- கலைபிரியன்

Friday, March 11, 2011

மனிதனுக்கும் மகாத்மாவுக்கும் என்ன வித்தியாசம்?

இன்று சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவைக் கேட்கும் பொது எனக்கு தலைப்பில் உள்ள கேள்விக்கு விடை கிட்டியது... என்னுடைய அறிவுக்கு எட்டிய சில தகவல்களையும் உதாரணங்களாக இணைத்துப் பதிவு செய்ய முற்பட்டுள்ளேன்...

"எவன் ஒருவன் இன்பத்தையும் துன்பத்தையும் சம நிலையில் வைத்துப் பார்க்கப் பழகுகிறானோ, அவனே வாழ்வில் உன்னத நிலையை அடைகிறான்" என்று பகவத் கீதை கூறுகின்றது... இந்தக் கருத்துக்கு எடுத்துக் காட்டுக்களாக கீழ் வரும் விஷயங்களைப் பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தில், கம்பன் மிக அழகாக இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார்...
"மேனி மெய்த்திருப் பதம் மேவு..." - இது தயரதன் "ராஜ்ஜியம் உனக்கே, அரச கோலம் பூண்டுகொள் மகனே..." என்று ராமனிடம் சொல்லவதாகக் கம்பன் எழுதுவது...
"இத் திருத் துறந்து ஏகு..." இது சித்தி கையேயி "ராஜ்ஜியம் உனக்கில்லை, இக்கோலத்தைத் துறந்து காட்டுக்குச் செல்" என்று ராமனிடம் சொல்வதாகக் கம்பன் எழுதுவது...
இந்த இரு செய்திகளைக் கேட்கும் போதும் ராமனுடைய முகம் எவ்வாறு ஒரே போல் சலனமில்லாமல் இருந்ததாம் தெரியுமா? (இங்கு தான், கம்பன் கற்பனை வளத்தையும் விஞ்சிய, ஒரு உன்னதக் கவிஞனாய் நிற்கிறான்) "சித்திரம் மலர்ந்த செந்தாமரை அன்ன..." இரண்டு நிலையிலும் ராமனின் முகம் ஓவியத் தாமரை போல இருந்தது என்கிறார் கம்பர்... எப்போதும், மென்மையான, சலனமில்லாத தாமரை போன்ற முகமுடையவன் ராமன் என்று மட்டும் கூடச் சொல்லியிருக்கலாம் கம்பநாடன்... உண்மையான தாமரை மலர் கூட வாடி விடும்... ஆனால், ஓவியத்தில் எழுதப் பட்ட தாமரை எப்படி வாடாமல் என்றும் ஒரே நிலையில் இருக்கிறதோ, அவ்வாறே, ராமனின் முகமும் இரண்டு நிலையிலும் மாற்றம் இல்லாமல் ஒளி பொருந்தியதாக இருந்தது என்பதை, இதனை விட அழகாக யாரால் இயம்ப முடியும்?

இதனையே, கண்ணதாசன் பின்வருமாறு தனது திரை இசைப் பாடல் ஒன்றில் குறிப்பிடுகிறார்...
"... புகழ்ந்தால் எனக்குப் புல்லரிக்காது
இகழ்ந்தால் என் அகம் உள் எரிக்காது
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் புழுதி வாரித் தூற்றட்டும்..."
ராமனையும் ராமாயணத்தையும் நம்பாதவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதனால், காமராஜர் வாழ்வில் நடந்த இரு சம்பவங்களை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம்... ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலகியதும், காமராஜர் முதல்வராக அமரவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். அகில இந்தியக் காங்கிரஸ்சின் விருப்பமும் அதுவே. காமராஜரிடம் அவ்விருப்பத்தை எடுத்துச் செல்கிறார்கள். அவர், சற்றும் சலனமில்லாமல், தான் பதவி வகிக்க சம்மதிக்கவேண்டுமானால் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிப் பட்டியலிட்ட கோரிக்கைகள் - "ராஜாஜி அமைச்சரவையில் 12 அமைச்சர்கள் இருந்தார்கள். என் அமைச்சரவையில் எட்டு பேர் தான் இருக்க வேண்டும். அவருக்குக் கொடுங்கள், இவருக்குக் கொடுங்கள் என்று சிபாரிசு செய்யக் கூடாது. ராஜாஜியை எதிர்ப்பவர்களை அமைச்சரவையில் வைத்திருக்க மாட்டேன்..." என்று மேலும் சில உன்னதமான கோரிக்கைகளை வைக்க, அவை ஏற்கப் பட்டு முதல்வராகிறார். அதே போல 1967 பொதுத் தேர்தலில் அண்ணா தலைமையிலான தி.மு.க கூட்டணி, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ்சை வீழ்த்துகிறது. மன்றாடியார், கக்கன் போன்ற மூத்த அமைச்சர்கள் தொற்றதோடல்லாமல், விருதுநகர் தொகுதியில் காமராஜரே தோற்றுப் போகிறார் (தி.மு.க வைச் சார்ந்த சீனிவாசன் என்ற 28 வயது இளைஞரிடம்). வீட்டுக்குள் வானொலியில் தேர்தல் முடிவுகளைக் கேட்ட படி சலனமில்லாமல் அமர்ந்து கொண்டிருந்த காமராஜரிடம், தொண்டர் ஒருவர் ஆற்ற மாட்டாமல் சொல்கிறார் - "அய்யா, நீங்க தோத்துப் போயிட்டத வேட்டுப் போட்டுக் கொண்டாடுறாங்க... எங்களால பொருக்க முடியல..." என்று. அதற்குக் காமராஜர் சிரித்துக் கொண்டே சொல்கிறார் - "எலேய், நான் ஜெயிச்சுருந்தா, நீ வேட்டுப் போட்டிருப்பேல்ல... அவனுவ ஜெயிச்சுட்டானுவ, வேட்டுப் போடுரானுவ... போய் வேலையைப் பாரு வே..." என்று. பதவி தேடி வரும் போதும், தோற்றுப் போய், பதவியைத் துறக்கும் போதும் ஒரே மாதிரியான சலனமில்லாத பக்குவம், அவர் போல், வேறு யாருக்கு வரும். அதனால் தான், அவருக்குப் பின்னால் இன்றுவரை, யாருக்கும் காமராஜர் ஆட்சியைக் கொடுக்க இயலவில்லை. அவரது பெயரைக் கூறி அரசியல் செய்யும், இன்றைய அரசியல்வாதிகள் யாராவது, அவரைப் போல, பதவி வரும் போதும், போகும் போதும் சம நிலையில், தங்களை வைத்துக் கொள்வார்களா?

ராமபிரான் வழியில், கண்ணதாசன் பாமரனுக்குப் புரியவைத்த, அந்த உன்னத நிலையை, அவர் அடைந்ததனாலேயே, கர்ம வீரர் என்று இன்றும் காமராஜர் புகழை நாம் பாடிக் கொண்டிருக்கிறோம்.

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்று ஏசுபிரான் விவிலியத்தில் கூறுகிறார். தவறு செய்பவர்களுக்கு மறு வாய்ப்பாகப், பாவ மன்னிப்பு வழங்கும் பழக்கம் இன்றும் கிறித்தவ தேவாலயங்களில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

புத்தர் வாழ்வில் கூட, இதற்கு ஒத்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒரு ஊரில், புத்தர், தன் சீடர் ஆனந்தர் என்பவருடன் சென்று கொண்டிருக்கிறார். அந்த வழியில் வந்த ஒரு விறகுவெட்டிக்கு புத்தர் மீது ஏனோ, அளவு கடந்த கோபம். கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற அவன், புத்தரை வழி மறித்து, அவர் முகத்தின் மீது காரி உமிழ்ந்து விடுகிறான். புத்தர், எந்த வித சலமுமின்றி அவனிடம் பரிவாகக் கேட்டார் - "ஏனப்பா, உனக்கு என்னிடத்தில் ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று. ஆனந்தன் சற்றே உணர்ச்சிவசப்பட்டு, "குருவே, அவனை என்னிடத்தில் விடுங்கள், நான் கேட்டுச் சொல்கிறேன்..." என்று சொல்ல, புத்தர் சொல்கிறார் - "ஆனந்தா, அவர் என்னிடம் ஏதோ சொல்லப் பிரியப் பட்டிருக்கிறார். அதனைச் சொல்ல அவரது மொழியில் வார்த்தை இல்லாத பலவீனம். இவ்வாறு செய்து விட்டார். மொழியின் பிழைக்கு, இவர் என்ன செய்வார், பாவம்..." இதைச் சொல்லிவிட்டுக் கருணை பொங்கும் அவருடைய பார்வையை அவன் மீது பதித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். வீடு சென்ற விறகு வெட்டிக்கு இரவு முழுக்க உறக்கம் வரவில்லை. எப்படிப் புரண்டு படுத்தாலும், புத்தருடைய கருணையான முகமே, அவனை ஆட்கொண்டிருக்கிறது. மறுநாள் காலை, புத்தர் ஆற்றங்கரையில் குளித்துவிட்டுத் திரும்புகையில், வேக வேகமாக ஓடி வந்து, அவர் காலடியில் விழுந்து கால்களைப் பற்றிக் கொண்டு கதறி அழுகிறான் அந்த விறகுவெட்டி. இதனை வியப்பாகப் பார்த்த ஆனந்தனிடம், புத்தர் மறுபடி சலனப் படாமல் சொல்கிறார்... "ஆனந்தா, அவர் என்னிடம் ஏதோ சொல்லப் பிரியப் பட்டிருக்கிறார். அதனைச் சொல்ல அவரது மொழியில் வார்த்தை இல்லாத பலவீனம். இவ்வாறு செய்து விட்டார். மொழியின் பிழைக்கு, இவர் என்ன செய்வார், பாவம்...". இதைக் கேட்ட விறகுவெட்டி, எழுந்து, "அடியேனை மன்னித்தீர்கள் என்று தயவு செய்து தாங்கள் திருவாய் மலரவேண்டும்" என்று அழுது கொண்டே கேட்கிறார். புத்தர் பதிலுரைக்கிறார் - "நீ நேற்றிருந்த நிலையில் இன்றில்லை. இன்று நீ பிழையே செய்யாமல் இருக்கும் போது, நேற்றே முடிந்து போன ஒரு விஷயத்திற்காக உன்னை நான் மன்னிக்க வேண்டிய அவசியம் எழ வில்லை" என்று.

புத்தர், ஏசு போல தன்னைத் துன்புருத்தியவர்களைக் கூடத் தனது அஹிம்சை வழியில் கவர்ந்து, நம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார் தேச பிதா மகாத்மா காந்தி என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதனாலேயே, அவரை மகாத்மா என்று அழைத்து வணங்குகிறோம்.

இன்னா செய்தாரை ஒருத்தர், அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்

என்று வாய் மொழிகிறான் வள்ளுவன்.

அன்னை தெரசா, தன்னுடைய கருணை இல்லத்துக்கு நன்கொடை வேண்டி ஒரு பணக்காரரிடம் கை ஏந்துகிறார். அந்தச் சீமான், வெறுப்பாய்க் காறி அன்னையின் கையில் உமிழ்ந்து விட, அந்தக் கையைப் பின்னால் வைத்துக் கொண்டு, இன்னொரு கையை நீட்டியவாறே அன்னை கேட்கிறார் - "பரவாயில்லை. அதனை எனக்காக வைத்துக் கொள்கிறேன், கருணை இல்லத்துக்கு ஏதாவது நன்கொடை கொடுங்கள்..." என்று. கோபத்தில் அந்தச் சீமானின் முகத்தில் அறைந்திருந்தால் கூட, இவ்வளவு தெளிவாக அன்னையின் நோக்கத்தை அவரால் புரிந்து கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு ஆழமாக அன்னையின் கருணை முகம், இச்செயல் மூலம் அவரது ஆழ் மனதில் பதிந்திருக்கும்.

புத்தன் வழி, ஏசு வழி, ராமபிரான் வழி, வள்ளுவன் வழி - கீதை போதித்த உன்னத நிலையை அடைந்ததன் மூலம், நமது சம காலத்தில் இல்லாவிட்டாலும், நாம் நன்கு அறிந்த தலைவர்களான அண்ணல் காந்தியடிகளும், கர்ம வீரர் காமராஜரும், அன்னை தெரசாவும் எப்படி உன்னத நிலையை அடைந்தார்கள் என்பது மேற்குறிப்பிட்டுள்ள உதாரணங்கள் மூலம் உள்ளங்கை நெல்லிக் கனியைப் போல் புலப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

அளவுக்கு அதிகமாக இனிப்பு உட்கொண்டால், சர்க்கரை நோய் வருகிறது. அளவுக்கு அதிகமாய் உப்பை உட்கொண்டால், ரத்த அழுத்தம் வருகிறது. மருத்துவர் அறிவுரைப் படி நாமும் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறோம். ஆனால், அளவுக்கு அதிகமான இன்பத்தையும், துன்பத்தையும் மட்டும் ஏன் நம்மால் உட்கொள்வதை நிறுத்த முடியவில்லை. இனியாவது முயற்சி செய்யலாமே?

- கலைபிரியன்

Thursday, March 10, 2011

திருவாசகத்தின் சிறப்பு (என்னுடைய முதல் ஆன்மிகம் சார்ந்த படைப்பு)...


என்னடா, ஒரு கனமான சப்ஜெச்டத் தொடரானே, இவன் வயசானவனோன்னு தயவு செய்து நினைத்து விடாதீர்கள், நண்பர்களே. நான் கேள்விப் படுகிற விஷயங்களில், என்னைக் கவர்ந்தவற்றை, எல்லோருக்கும் புரியுமாறு பதிவு செய்ய விரும்பும் ஒரு சாதாரண வலைப் பதிவன் நான்... விஷயத்துக்குப் போவோமா?

திருவாசகம் என்பது ஒவ்வொரு மனிதனும், தன்னைத் தேடத் துணை புரியும் ஒரு சிறந்த படைப்பு. அதனால் தானோ என்னவோ, அதன் பால் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. அதன் முக்கியத்துவம் தெயரியாத வயதில், சிறுவனாக இருக்கும் பொது தேவாரம் கற்ற எனக்குத் சிற்சில திருவாசகப் பதிகங்களும் போதிக்கப் பட்டன. இன்றளவில், அவை என் வழக்கமான பயிற்சியில் இல்லாவிட்டாலும் கூட, அதன் சிறப்பை உணரும் சந்தர்ப்பம், இணைய வானொலி வாயிலாக சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவைக் கேட்கும் போது கிட்டியது. அப்போது தான் எண்ணிக் கொண்டேன், நான் சிறு வயதில் அவற்றைக் கற்று ஓத, எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று. அதனாலேயே, நான் தெரிந்து கொண்ட திருவாசகத்தின் சிறப்பை, சற்று விரிவாகப் பதிவு செய்ய ஆவல்.

"சரி, சரி, உன்னப் பத்தி அளந்தது போதும்"ன்னு சொல்றீங்க. கேட்குது. இதோ, வந்தேன்...

தெரிந்த நிலையிலிருந்து, புரிந்த நிலையின் ஊடாக, உணர்ந்த நிலையை அடையும் பயணமே வாழ்க்கை. இதற்கான ஒரு சிறந்த கையேடே, திருவாசகம். மேலோட்டமாகப் பார்த்தால், இது புரியாது. ஒரு உதாரணத்துடன் பார்ப்போமே:

வீட்டில் ஒரு குழந்தை, பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அம்மா அலுவல் முடிந்து வரும் நேரம். வாசலில் சத்தம் கேட்டவுடன், ஆவலாக எட்டிப் பார்க்கிறது குழந்தை. கவனக் குறைவில், பொம்மை கை நழுவி விழுந்து உடைந்துவிடுகிறது. மிகவும் பிடித்த பொம்மை ஆதலால், குழந்தை அழ ஆரம்பித்து விடுகிறது. அலுவல் செய்த அலுப்புடன் உள் நுழைகிற தாய், "என்னடி ஆச்சு, நீ எப்பவுமே இப்படித்தான், எதுலையுமே கவனம் இல்லையே... இரு இரு, வர்ரேன்..." என்று, தன் மேலாளர் மீதிருக்கும் கோபத்தையும் சேர்த்துக் குழந்தை மீது காட்டிக் கடிந்து கொண்டவாரே, கைப்பையை மேசை மீது வைத்து விட்டு, முகம் கழுவச் சென்று விடுகிறார். முகம் கழுவுகையில், ஒரு நினைப்பு, "ச்சை, ரொம்பத் திட்டீட்டமோ? நம்ம பண்ணாததையா, பாவம் அது பண்ணீருச்சு..." என்று தாய்க்கே உரித்த கரிசனம் தொற்றிக் கொள்கிறது. அதே சமயம், பிடித்தது உடைந்ததை எண்ணி அழத் தொடங்கிய குழந்தை, அம்மா திட்டியதை எண்ணி, "நாம் ஏதோ தவறைச் செய்து விட்டோம்" என்பது புரிந்தும், அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், மேலும் கேவிக் கேவி அழத் தொடங்கியது. தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு. உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த அம்மா, "செல்லம்... இங்க பார்ரா, இதுக்குப் போயா அழுவாங்க... பரவாயில்லடா... வேற பொம்மை வாங்கித் தர்ரேன், அம்மா... இங்க பாரு, அம்மா உனக்கு என்ன வாங்கீட்டு வந்துருக்கேன்னு... டட்டடோய்ன்..." என்று தன் கைப்பையிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து நீட்ட, சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டு அழுகை கலந்த சிரிப்புடன் அதனைப் பற்றிக் கொண்டு அம்மாவை முத்தமிட்டது குழந்தை.

விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை, அம்மா வாங்கிக் கொடுத்த (தனக்கு மிகவும் பிரியமான) பொம்மை உடைந்தது தெரிந்து அழுகிறது. தான் தவறு செய்துவிட்டோம், இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்பதை,  அம்மா கடிந்து கொண்டதன் மூலமாகப் புரிந்து கொள்கிற அந்தக் குழந்தை, வாழ்க்கையில் அனுபவிக்க இன்னும் எவ்வளவோ இருக்க, அந்த பொம்மையையே ஏன் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை, அம்மா சமாதானப் படுத்தியவுடன் உணர்ந்து கொள்கிறது. இந்த உதாரணத்தில், அந்தக் குழந்தையைத் தாய் எப்படித் தெரிந்த நிலையில் இருந்து, புரிந்த நிலை ஊடாக, உணர்ந்த நிலைக்குக் கொண்டு வருகிறாரோ, அப்படித் தான், நாம் வாழ்க்கையில் பயணிக்க வேண்டும். அதற்குத் திருவாசகம் ஒரு சிறந்த கையேடாக விளங்குகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த ஒரு சம்பவம். ஜி. யூ. போப், என்பவர் ஐரோப்பாவிலிருந்து கிறித்துவ மதம் பரப்பும் போதகராகத் தமிழ் நாட்டுக்கு வருகிறார். தமிழ் இலக்கியத்தை ஆர்வத்துடன் கற்ற அவர் திருவாசகத்தைப் படிக்க, அது அவரை ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு சமயத்தில், யாருக்குக் கடிதம் எழுதினாலும், திருவாசகத்திலிருந்து இரண்டு வரிகளை எழுதி, அதன் மொழி பெயர்ப்பையும் எழுதி, அதன் பின்னேயே கடிதத்தை எழுதும் அளவுக்கு ஆர்வம் கொள்கிறார். இருந்தாலும், தனக்கிடப் பட்ட பணியான கிறித்தவ மத போதனையையும் செவ்வனே செய்து வருகிறார். அவரின் மிஷனரி அமைப்பைச் சேர்ந்த மற்றவர்கள், மேலதிகாரிகளான பிஷப்களிடம் இதனைப் பற்றிக் குறை கூற (நம் மத்தைப் பரப்ப வந்தவர், இன்னொரு மதம் சார்த்த இலக்கியப் படைப்பைத் தழுவிக் கொண்டிருக்கிறாரே, என்று), விசாரணைக்காக ஒரு பிஷப்பை நியமித்து, அவரிடம் விளக்கம் கேட்டுச் சொல்லும்படி பணிக்கப் படுகிறார், அந்த பிஷப். பிஷப் தமிழகம் வந்து இவரிடம் விளக்கம் கேட்க, இவர்... "அமருங்கள், உங்களுக்கும் திருவாசகத்தின் சிறப்பை விளக்குகிறேன்" என்று சொல்லி, ஒரு மணி நேரம் விளக்குகிறார். அதனைக் கேட்டுச் சிலிர்த்துப் போன பிஷப், தன்னை நியமித்த மேலதிகரியான பிஷப்பிடம் என்ன சொல்கிறார் தேரியுமா - "வாழ்க்கை பற்றிய, இவ்வளவு அருமையான சைவ இலக்கியப் படைப்பாகிய திருவாசகத்தைக் கரைத்துக் குடித்த பிறகும், போப், சைவத்தைத் தழுவாமல், இன்னும் கிறித்தவராகவே இருப்பதற்கே நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும்..." என்று. அப்பேற்பட்ட, மாற்றாரையும் போற்ற வைக்கும் வல்லமை படைத்த படைப்பு, திருவாசகம்.

வீட்டில் உள்ள வயசானவர்களுக்கு, சின்னவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எங்கே போகிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள அதீதமான ஆர்வம் ஏற்படுவதை, நாம் எல்லோரும் பார்க்கிறோம். (அவர்களது அக்கறை மிகுதி கூட, இதற்குக் காரணமாக இருக்கலாம். தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கருத்தை வலியுறுத்துவதற்காகவே, இதனை ஒரு உதாரணமாக மட்டுமே பதிவு செய்கிறேன்). சமயத்தில், அவ்வளவு வயதாகாதவர்களுக்குக் கூட அடுத்தவர்கள் பற்றிய ஆர்வமிகுதி இருக்கக் கண்டிருக்கிறோம். மொத்தத்தில், அடுத்தவர்கள் பற்றி நாம் அறிய முனைகிற தீவிரத்தில், பத்தில் ஒரு பங்கு நம்மை அறிவதற்குப் பயன்படுத்தினால் கூட வாழ்க்கையையையும், அதனைச் சுற்றி இருக்கும் மாயையையும், மிகவும் எளிதில் புரிந்து கொண்டுவிட முடியும். அந்தப் புரிதல் பெற, அனைவரும் நாட வேண்டிய அருமையான படைப்பு - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். நமச்சிவாயம்...

- கலைபிரியன்

Wednesday, March 9, 2011

விவாதக் களம் I... வள்ளுவன் பெண்ணுரிமையில் வரலாற்றுப் பிழை செய்துவிட்டானா?

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"

என்று ஆண்பாலைச் சுட்டி வள்ளுவன் எழுதிய குறளின், அதே பொருளுக்கொத்த பாரதியின் பாடற் பகுதி...

"... மெச்சி உனை ஊரார் புகழும் போதே, என் மேனி சிலிர்க்குதடி..."

எனப் பெண்டிரைச் சுட்டிப் பாடியிருக்கிறான் முண்டாசுக் கவிஞன்.

வள்ளுவனின் பிழையைச் சரி செய்யவே இப்பதிவை பாரதி செய்தானா?

வள்ளுவனுக்கென்ன பாலைக் குறிக்காமல் கருத்தைப் பதிவு செய்ய வார்த்தைக்கா பஞ்சம்? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது... உங்கள் கருத்துக்களை இவ்விடுகையின் மறுமொழியாகப் பதிவு செய்யுங்களேன்?

- கலைபிரியன்

கேள்விப்பட்டது...

சமீபத்தில் ஒரு சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது... அதில் நான் கேட்ட இரண்டு மிகச் சிறந்த கவிகளின் வாழ்வில் ஏற்பட்ட மிக சுவாரஸ்யமான சம்பவங்களை இவ்விடுகையில் பதிவு செய்ய விழைகிறேன்...

1. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இவர்,  இளம் பிராயத்தில், கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர். அவர்கள் இல்லத்தில் ஒரு பழக்கம். யாருக்கேனும் பிறந்த நாள் என்றால், வீட்டுக் கூடத்தின் நடுவே வைக்கப் பட்டுள்ள ஏட்டில், எல்லோரும் தத்தம் வாழ்த்துக்களை, பிறந்தநாள் கொண்டாடுவோருக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரின் பிறந்த நாள் அன்று அவரது தாயார் என்ன எழுதினார் தெரியுமா? - "ஆண்டவா, எனது மற்ற பிள்ளைகள் எல்லாம் மருத்துவர், வக்கீல், பொறியாளர் என ஏதோ வகையில் பொறுப்பானவர்களாக திகழ்கிறார்கள். இவன் மட்டும் ஏனோ கவிதை. கவிதை என்று பொழுதைக் கழிக்கிறானே... இவன் விரைவில் வாழ்வில் உருப்படியாக ஏதேனும் செய்ய அருள் புரியுங்கள், இறைவா..." என்று தனது விருப்பத்தையும், வேண்டுதலையும், வாழ்த்தையும், ஒரு கவலையான தாயின் கோணத்தில் பதிவு செய்திருந்தார்...

இது நடந்து கிட்டத் தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், நமக்கு அந்தக் குடும்பத்திலிருந்து நீங்காமல் நினைவில் இருப்பவர், இந்தக் கவி மட்டும் தான். அந்தக் குடும்பத்தில், மற்றவர்கள் அன்றைய நிலையில் எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்திருந்தாலும், அவர்கள் யாரையும் நாம் நினைத்துக் கூடப் பார்க்க வாய்ப்பில்லை. "உனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை, விருப்பு, வெறுப்பு, இகழ்ச்சி, புகழ்ச்சி, மற்றவர்கள் கருத்தின் அடிப்படையில் இல்லாமல், உன்னுடைய மனசாட்சியின் படி, பின் தொடர்ந்து, முயற்சி செய்து நிறைவேற்றுவாயாயின், அதுவே சுயதர்மத்தின் அடிப்படையில் நீ வாழ்பவன் என்பதற்கு அடையாளம்" என்ற கீதோபதேசத்துக்கேற்ப வாழ்ந்த அந்தக் கவி...

இரண்டு நாடுகளுக்குத் தேசிய கீதம் படைத்த, (ஆம் - உலகில் வேறு யாருக்குமே இல்லாத புகழ் இவருக்கு உண்டு - இந்தியாவுக்கும், வந்காளதேசத்துக்கும், இவர் எழுதிய பாடல்கள் தான் தேசிய கீதங்கள்), "ரபீந்திரநாத் தாகூர்"...

2. இளம் வயதில் மறைந்தவர் இவர். இவரது மனைவி, பின்னாளில் எழுதிய சுயசரிதையில் இவர்களது வாழ்வில் நிகழ்ந்த, ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பதிவு செய்கிறார். இருவரும் திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலைக்குச் செல்கிறார்கள். கவி சற்று உணர்ச்சி (எவ்வித உணர்ச்சியாக இருந்தாலும்) மிகுதியானவர். புலிக் கூண்டுக்கு அருகில் அவர்கள் செல்கையில், புலி தூங்கிக் கொண்டிருந்தது. நமது கவி அதனருகில் சென்று, "நீ காட்டுக்கு ராஜா, நான் நாட்டுக்கு ராஜா... ஹை... ராஜாவுக்கு ராஜ தொட்டுப் பேசிக்கொள்ளலாமா..." என்று கூண்டுக்குள் கை விட்டுத் தொடப் போனார்... மனைவிக்கு வியர்த்துப் போனது... அவரிடம் பயம் வேறு... மெதுவாக அவரிடம்.. "அதெல்லாம் வேண்டாமே, எதனா ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போறது..." என்று சொல்லியிருக்கிறார்... "நீ சும்மா இரு..." என்று செல்லமாகக் கடிந்து கொண்டு, தொடும் தன் முயற்சியைத் தொடர்ந்தார் கவி... மனைவி தன் மனதுக்குள்ளேயே எண்ணிக் கொண்டாராம் - "அய்யோ, ஆண்டவா... இவருக்கு இல்லா விட்டாலும், அந்தப் புலிக்காவது நல்ல புத்தியைக் கொடு" என்று...

பதிவு செய்தவர் - "செல்லம்மாள் பாரதி" கவி - "மகாகவி சுப்ரமணிய பாரதி"

- கலைபிரியன்