வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Tuesday, March 22, 2011

குறிச்சிடுங்க அவுக தேதிய...

பிள்ளையார் கோவிலில் அருகம் புல் கொடுக்காக - எல்லாப் பிணிகளையும் போக்க வல்லதாம்...
சிவன் கோவிலில் வில்வ இலை தந்தாக - நீரிழிவு நோயே வராமல் செய்வதாம்...
பெருமாள் கோவிலில் துளசி தாராக - சளி ஏதும் அண்ட விடாதாம்...
மேலும் கொடுத்தாக பச்சைக் கற்பூரத் தீர்த்தம் - நீரின் கிருமிகளை நிர்மூலமாக்கிடுமாம்...

சாமிக்குக் கும்பிடு போட்டாப் பிணி தீராதுன்னு, பகுத்தறிவுப் பகலவன் சொல்றாக...
அதுக்குப் பதிலா, கும்புடு போடுற ஆசாமிக்கு வோட்டுப் போட்டா,
இலவசமா நிலவத் தாரமுன்னும் சொல்லுறாக...கேட்டுக்குங்க சேதிய...
இனியாவது குறிச்சிடுங்க அவுக தேதிய... ஏப்ரல் 13... தேர்தல் நாள்...

- கலைபிரியன்

Monday, March 21, 2011

படித்த காமராஜ்...


1967 தேர்தலில், காமராஜரை எதிர்த்து தி.மு.க சார்பில் பெ. சீனிவாசன் என்ற இளைஞர் களம் கண்டு வென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரது வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கூட்டப்பட்ட பொதுக் கூட்டத்தின் போது நடந்த சுவையான சம்பவம்.

அந்தப் பகுதியில் சிலரால் அறியப்பட்ட ந. காமராஜ் என்ற இளைஞர் இருந்தார். அவர் படித்தவர். அவர் பெ. சீனிவாசனைப் பாராட்டிப் பேச ஏற்பாடாகியிருந்தது. அதற்காக தி.மு.க அடித்த சுவரொட்டியில் இருந்த வாசகம் - "பெ. சீனிவாசனைப் பாராட்டிப் படித்த காமராஜ் பேசுவார்" என்று காமராஜரை மட்டம்தட்டுவது போல அமைந்திருந்தது அந்த வாசகம்.

அதனைப் பெரியார் கவனத்துக்குக் கொண்டு செல்கின்றனர். அவர் சொன்னார் - "சுவரொட்டியில் ஒரு சின்னத் திருத்தம். பெ. சீனிவாசனைப் பாராட்டிப் படிக்காத காமராஜ் கட்டிய பள்ளிக்கூடத்தில் படித்த காமராஜ் பேசுவார் என்றிருந்திருக்க வேண்டும்..." என்று.

காமாராஜர் ஆட்சிக்கு வந்த போது, தமிழகத்தில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 35,000. அவர் ஆட்சியில் இருந்து இறங்கும் போது, அவை 1,60,000. இந்தப் புள்ளிவிவரத்தைக் கூட எடுத்து வைக்காமல், சுவரொட்டி ஒட்டியவர்களை நாணித் தலை குனியச் செய்திருக்கிறார் பெரியார். இன்று, அவர் வழித் தோன்றலாக உருவாகிய கட்சிகளின் கழகக் கண்மணிகள் நடத்துகின்ற கூட்டங்களையும், கடைபிடிக்கின்ற நாகரீக அணுகுமுறைகளையும் காணும் போது, இவ்விஷயங்களைக்
கேள்விப் படுகின்ற நமக்கு ஏக்கமாகத் தானே இருக்கும்?

- கலைபிரியன்

இன்று உலகத் தண்ணீர் தினம்...

வங்கக் கடலில் சுனாமியாய் வந்தால்,
வாரிச் சுருட்டி ஓடும் நீங்கள்... வீட்டு
வாசற் குழாயில் நான் வரும்போது மட்டும்
வால் தனத்தைக் காட்டுவதேன்?

கார்மேகத்தின் கண்ணீர்த் துளி நான்...
கரைந்தால் மழை, கதறினால் வெள்ளம்...
என்னை வரச் சொல்லித் தூது விடும் மரங்களை
நீங்கள் வெட்ட, கனக்கிறது என் உள்ளம்...

வங்கிக் கணக்கில் துட்டுச் சேர்க்கும் நீங்கள்,
மண்ணின் மாடியிலிருந்து என்னை மட்டும்
ஒரு சொட்டு விடாமல் உரிந்துவிடுவதில்
தான் என்ன நியாயம்? - சொல்லுங்கள்...

வரவுக்கேத்த செலவு, வாழ்க்கையெல்லாம் மகிழ்வு...
சிந்தியுங்கள்... என்னை, இனியாவது சேமியுங்கள்...

- கலைபிரியன்

தேர்தல் அறிக்கையில் வாக்காளர்கள் எதிர்பார்க்கும் பதில்கள்...

பரம ஏழைகள் என்ற ஒரு பிரிவே ஒழிக்கப் பட வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அரசின்பால் மக்களுக்கு இருக்கையில், "பரம ஏழைகளுக்கு இலவசம்..." என்ற பகிரங்கமாகவே ஒரு ஆளுங்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டு விளம்பரப்படுத்துவது மகா கேவலம். மேலும், கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் அவர்கள் அடைந்த தோல்வியையே இது பிரதிபலிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும், மக்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் எதிர்பார்ப்பது கீழ்க்காணும் கேள்விகளுக்கான பதில்களாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, இலவசங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களாக, வாக்காளர்கள், இனிமேலும் இருந்துவிடக் கூடாது.

கல்வியின் தரத்தையும், அதன் வியாபாரமயமாக்கலைத் தடுக்கவும் என்னென்ன செய்தீர்கள்?
விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க என்ன திட்டம் வகுத்தீர்கள்?
வேலைவாய்ப்பைப் பெருக்க நீவிர் செய்த செயல்கள் என்ன?
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்த எவ்வளவு ஒதுக்கினீர்கள்?
லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க என்ன செய்வதாய் உத்தேசம்?
மின்சாரம், சாலைகள் மற்றும் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் திட்டங்கள் உங்கள் கைவசம் இருக்கிறதா?
விவசாயம் தழைக்க ஏதேனும் செய்ய முடியுமா?
தொழில் துறை வளர்ச்சியில் குஜராத் போன்ற மாநிலங்களுடன் தமிழகம் போட்டி போடா இயலுமா?
பெங்களூருக்கும் ஹைதராபாத்துக்கும் இணையான விமான நிலையம் சென்னையில் வருமா வராதா? இதனால் தொழில் துறையில் தமிழகம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறதே?
காலை மாலை நேரங்களில் நகர்ப் புறப் போக்குவரத்து நெரிசலை எவ்வாறு சமாளிப்பது?
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கல்லவா இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்? சாதிய ரீதியில் வோட்டுக்காக இட ஒதுக்கீடு அளிப்பது எந்த விதத்தில் நியாயம்?
ஒரு லட்சம் கோடி ரூபாயான மாநிலத்தின் கடனை அடைக்க என்ன தான் வழி?
எங்களுக்கான மக்கள் பிரதிநிதி எத்தனை நாட்கள் தொகுதியில் இருப்பார்? எங்களுக்கான குறைகளை அவரிடம் நேரில் கூறி முறையிட இயலுமா?
மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு ஒளிவுமறைவின்றி இருக்கவும், எதிர்க் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தால், அரசால் மக்கள் புறக்கணிக்கப் படாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப் படுமா?

- கலைபிரியன்

Friday, March 18, 2011

கலைஞரின் கடந்த ஐந்தாண்டு ஆட்சி கால சாதனைகள்... தேர்தல் பிரசாரம் தேவையா?


இன்றைய ஆளுங்கட்சி கடந்த ஐந்தாண்டுகளில் செய்த அரும் பெரும் சாதனைகள் தான் எத்தனை எத்தனை... நாங்கள் வோட்டுக் கேட்டு வர வேண்டிய அவசியமே இல்லை... வாக்காளர்களே, தத்தம் வோட்டுக்களை எங்களுக்கும், எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டுவிடும்படியான சாதனைப் பட்டியல், இதோ...

மகளிர் மேம்பாடு - தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், கனிமொழி, கயல்விழி, எழிலரசி, பூங்கோதை ஆலடி அருணா, தேன்மொழி கோபிநாதன், குஷ்பூ, விஜயா தாயன்பன், இந்திரகுமாரி போன்ற கஞ்சிக்கு வழியில்லாத இன்னும் எவ்வளவோ திராவிட குலவிளக்குகளை, மகளிர் குல மாணிக்கங்களைப் பெருமைப் படுத்திக் கோடிகள் புரளும் கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் அமரச் செய்யது, நாங்கள் ஆற்றிய சாதனையை யாரால் முறியடிக்க முடியும்? எதிர்க் கட்சித் தலைவி ஒரு பெண்ணே ஆனாலும் கூட, அவரது ஆட்சி காலத்தில் பயன் அடைந்த ஒரே பெண்மணி சசிகலா கூட இவர்களைப் போல் எவ்வளவு பயனை அடைந்துவிட்டார்? இதற்கு மேலும் மகளிர் மேம்பாட்டுக்கு, இந்தத் தள்ளாத வயதில் என்ன தான் செய்து விட முடியும்? இதற்கு மேலும் மங்கையர் ஆளுங்கட்சிக்கு வோட்டுப் போடுவதைத் தவிர்ப்பார்களே ஆனால், அவர்கள் குலம் விளங்கத் தான் செய்யுமா? அதனால், சுயமரியாதைத் தமிழனான என்னை தயவு செய்து எனது கொள்கைக்கு மாறாக சாபம் விட வைத்துவிடாமல், பெண்களே, தங்களது பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஆளுங்கட்சிக்கும், உள்ளடி வேலைகளில் சிக்காத கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் பதிவு செய்திடுவீர். அப்படிப் பதிவு செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. வேறு யாராவது உங்கள் சார்பில் உங்கள் வோட்டைப் பதிவு செய்திருந்தாலும், தயவு செய்து, அதனைப் பற்றி ஜெயா தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்காதீர்...

தொழில் வளம் - தம்பி மாறன் (அய்யா, அவர் பேரன் இல்லையான்னு கேக்கலாம்... நான் தான் ஸ்டாலினையே தம்பின்னு தானே சொல்றேன்...), விமானப் போக்குவரத்து நிறுவனத்தை வாங்கியிருக்கிறார். "Cloud Nine", மற்றும் "Red Giant" என்று சுத்தத் தமிழில் பட நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டி, மானிய விலையில் உழைக்கும் வர்க்கத்துக்கு சினிமா காட்டுவதை, சமூக சேவையாகவே கருதிச் செய்துவருகிறார்கள் என் பேரன் மார்கள். சூப்பர் ஸ்டார், அருமைத் தம்பி ரஜினிகாந்த் (அவர் வாய்ஸ் குடுத்தாலும் குடுக்காட்டியும், எனக்குத் தம்பி தாம்பா) அவர்களை வைத்து, இவ்வளவு கம்மியான பொருட்செலவில் வேறு யாராலாவது இவ்வளவு தரமான சினிமாவை உருவாக்க முடியுமா என்று உலக மக்கள் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது "Sun Pictures". போலி மருந்து விற்றே, ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு விலையுயர்ந்த கார் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு ஆருயிர் இளவல் மீனாட்சி சுந்தரம் தொழில் வளர்ச்சி பெறவில்லையா? (இவர் பெயரைக் கூறாவிட்டால், எல்லாரும் குடும்ப உறுப்பினர் தானேன்னு கேட்டுடக் கூடாது பாருங்க). கர்பவதியாய் இருக்கும் போது கராக்ரகம் கண்ட திராவிட குல திலகம் சத்தியவாணி முத்து வழி வந்த கழகக் கண்மணி, கனிமொழியின் உதவியோடும், கலகக் கண்மணி நீரா ராடியா துணையோடும், முதலீடே செய்யாமல், நாட்டுக்கு 1,76,000 கோடி நஷ்டம் ஏற்படுத்தி, அவருக்கும், எங்கள் கழகம் பெயரால் இயங்கி வரும் கலைஞர் & கோ நிறுவனத்துக்கும் ஆயிரக் கணக்கான கோடிகளைக் குவிக்கப் பேறுதவி புரிந்து, அதன் விளைவால், இன்று திஹார் சிறையில் வாடி வதங்கும் கழகத்தின் கொ.ப.செ திருவாளர் ஆ, ராசா செய்த அரும்பணியைக் கூறுவதற்குள், எனக்கே விக்கி நெஞ்செல்லாம் அடைத்துவிடும் போல் இருக்கிறது. தமிழகத்தின் கடனை 1,00,000 கோடி சுமையாக ஏற்றியபின் இவ்வளையும் செய்து முடித்த நாங்கள், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்தால், இன்னும் என்னவெல்லாம் செய்திடுவோம் என்று சற்றே சிந்தித்துப் பார்த்து வாக்களியுங்கள். அந்த அம்மையாரால், இவை போன்ற சாதனைகள் சாத்தியமா? இல்லை என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அதனால், தயவு செய்து உங்களிடம் வந்து, இந்தத் தள்ளாத வயதில் தொண்டைத் தண்ணி வற்றக் கூவிக் கூவி பிச்சை எடுக்க வைத்துவிடாதீர்கள் என்று பெரியாரின் பெயரால், அண்ணாவின் பெயரால் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கு - மேயர் தலைமையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை எரித்து, அப்பாவித் தமிழர்கள் மூன்று பேரைக் கொன்று, பேரன்களிடம் பணம் பெற்று சமாதானம் ஆன பின்பு, எவ்வளவு லாவகமாக அந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்து விட்டோம்? அதிகாலையில் நடைபயிற்சிக்குச் சென்ற எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சரைக் கொலை செய்துவிட்டு, அந்த வழக்கிலிருந்து எவ்வளவு லாவகமாகத் தப்பித்து, கொலை செய்தவர்களையே, மத்திய அமைச்சராக்கி, மதுரை மாநகரின் துணை மேயராக்கி அழகு பார்த்திருக்கிறோம்? இரண்டொரு நாட்களுக்கு முன்பு கூட ஸ்பெக்ட்ரம் வழக்கில் அப்ரூவராக இருந்த ராசாவின் பினாமி, ஆருயிர் தம்பி சாதிக் பாஷாவை, அந்த சிரமங்களை எல்லாம் மேற்கொண்டு தன்னையும், தனது குடும்பத்தையும் வருத்திக் கொள்ள மனம் ஒவ்வாமல், இப்பூவுலக வாழ்வில் இருந்து விடுதலை கொள்ளச் செய்தோம். இவ்வளவு தெளிவாக சட்டம் ஒழுங்கை அந்த அம்மையார் ஆட்சி செய்த காலங்களில் பாதுகாத்ததுண்டா? இதற்கு மேலும் எங்களுக்கு ஓட்டுப் போடாவிட்டால், நான் பேச மாட்டேன். எனது உடன்பிறப்புகள் பேசுவதைத் தடுக்கவும் மாட்டேன் என்பதை மனதில் இருத்தி வோட்டுப் போடுங்கள்.

இதுதவிர, மத்தியில் உள்ள ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டு, ஆட்சியாளர்களைப் பாடாய்ப் படுத்திப் பச்சடி வைத்து, நம் மக்களுக்கு வேண்டியதைச் செய்துகொள்வதில், அந்த அம்மாவுக்குத் திறமை பத்தாது. போஸ்ட் ஆபீசையே மக்கள் நாடாத கால கட்டத்தில், நானும் கழகத் தம்பி மார்களும் மட்டும் மத்திய அரசுக்குக் கடிதங்களும் தந்திகளும் அனுப்பாவிட்டால், தபால் நிலையங்களே நாட்டில் இயங்க முடியாத அளவுக்குப் போயிருக்கும். இப்படி எங்களுக்கு சம்பதமே இல்லாத துறைகளில் கூடப் பொருளாதார வளர்ச்சி பெற எங்களை விட்டால் உங்களுக்கு வேறு நாதி கிடையாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

- கலைபிரியன்

Thursday, March 17, 2011

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்பி க்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் - விகிலீக்ஸ் தகவல் - நல்லா இருக்குதைய்யா பிரணாப் முகர்ஜி ஞாயம்... வடிவேலு ஸ்டைலில் - "ஹ்ம்... அது போன மாசம்..." என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறார்...


கடந்த மூன்று நாட்களாக, விகிலீக்ஸ் இணையதளத்தில் இந்தியா தொடர்பாகக் கசிந்த தகவல்கள் பற்றி இந்து நாளிதழில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

முதலில், திருமங்கலம் இடைத் தேர்தலின் போது, அஞ்சா நெஞ்சன் அழகிரி சார்பில் ஒவ்வொரு வாக்காளருக்கும் 5000 ரூபாய் கவரில் வைத்து செய்தித் தாள்களில் மடித்துத் தரப் பட்டன என்று அவரது ஆதரவாளரான மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் கூறியதாக ஒரு செய்தி. ஊர் உலகத்துக்கே தெரிந்து, இத்திருநாட்டில், தேர்தல் என்று ஒன்று வந்தாலே, "திருமங்கலம் பார்முலா" என்று, நாடே நாறிய பிறகு, இதனை நமக்குத் தெரிவிக்க விகிலீக்ஸ் தேவையில்லை என்பது வேறு விஷயம்.

அடுத்து, சிவகங்கை தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலின் போது, இன்றைய உள்துறை அமைச்சர், மாட்சிமை தங்கிய (அறிவுஜீவி), திரு. ப. சிதம்பரம் அவர்களுக்காக, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தொகுதியில், சிறப்பாகத் தேர்தல் பணி செய்ததாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுவதாக ஒரு தகவல். வாக்காளர்களுக்கும், அவர்களுடைய கிராமங்களுக்கும் பணம் பட்டுவாடா செய்வதில், அவரது தந்தைக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட, அவர் அப்பணிகளை அற்புதமாகச் செய்வதாகப் பாராட்டுப் பத்திரம் வேறு வாசித்திருக்கிறார். எனக்கு ஒன்று தான் புரியவில்லை, இவ்வளவு செய்தும், கடைசியில் சிதம்பரம் தோற்றதாக அறிவிக்கப்பட்ட பின், எவ்வாறோ ஞானோதயம் பிறந்து ராவோடு ராவாக, அவர் ஜெயித்ததாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? இது சம்பந்தமாக, விகிலீக்சில் ஏதாவது தகவல் கசிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

ஊரறிந்த விஷயங்கள், கசிந்தால் என்ன, கசியாவிட்டால் தான் என்ன? தேசிய அளவில் நாறிக் கொண்டிருந்தவர்கள், இதன் மூலம், சர்வதேச அளவில் நாறிக் கொண்டிருக்கிறோம்... இது காங்கிரஸ் மற்றும் தி.மு.க அரசுகளின் மகத்தான சாதனை அல்லவா? தேர்தல் அறிக்கையில் சொல்லாத இப்படியான சாதனைகளையும் நிகழ்த்துவதில் இவர்களை மிஞ்ச யாரால் முடியும்? ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாறிய அளவு ஒன்றும், இவ்விஷயங்களால் நாற வில்லை. அந்த வகையில் ராசாவும், கனிமொழியும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம், அவர்களது சாதனை முறியடிக்கப் படவில்லை என்று.

மூன்றாவது, முக்கியமானது - அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில், கடந்த 13 ஆவது நாடாளுமன்றத்தில், அன்றைய அரசு மீது, இடதுசாரிக் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசுக்கு ஆதரவாக வோட்டளிக்க, எம்.பி க்களுக்கு லஞ்சம் தரப்பட்டது என்னும் தகவல். தாங்களும் மக்கள் பிரதிநிதிகள் என்று காட்டிக் கொள்ள ஏதாவது கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருந்த எதிர்க் கட்சியினர், இந்த விஷயத்தை "லபக்" என்று பற்றிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் நேற்று அமளி துமளி செய்ததாக ஒரு செய்தி... அதற்கு, எந்தப் பிரச்சனையில் காங்கிரஸ் ஆப்பு வாங்கினாலும், எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த ஆப்பை அகற்றும் வல்லமை படைத்த (chief troubleshooter), மூத்த அரசியல்வாதி (பாவம், இவரையும் ஒருமுறை கொலுவில், பிரதமர் பொம்மை ஆக்கி அழகு பார்க்கத் தான் சோனியாவுக்கு மனசு வர மாட்டேங்குது...), இன்றைய நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி, எழுந்து ஒரு விளக்கம் தந்தாரே பார்க்கலாம்... "இத் தகவல், ஒரு வல்லரசு நாட்டுக்கும், அதன் தூதரகத்துக்கும் இடையே நடந்த விஷயம். அது போக, இது நடந்தது, கடந்த 13 ஆவது நாடாளுமன்றத்தில். இப்போது நாம் இருப்பது, 14 ஆவது நாடாளுமன்றம். அதனால், இத் தகவல்களை உறுதிப் படுத்துவதோ, மறுப்பதோ, இயலாத காரியம். 13 ஆவது நாடாளுமன்றத்தில் என்ன நடந்திருந்தாலும், அதன் ஆயுட் காலம் முடிவடைந்ததுமே, அவ்விஷயங்களும் முடிவுக்கு வந்து விடும். இப்பிரச்சனைகளை, இப்போது அலசுவது தேவை இல்லாதது..." என்று...

யப்பப்பா... இவ்வளவு பொறுப்புணர்ச்சி மிக்க பதிலை, இக்கட்டான நேரத்தில், அதுவும், நாடாளுமன்றத்தில் சொல்லவும் ஒரு துணிவு வேண்டும், மனிதருக்கு... வின்னர் படத்தில், வடிவேலு, "அது, போன மாசம்..." என்று ஒரு பிரபலமான வசனம் பேசியிருப்பார். இந்தப் பதிலைக் கேட்டதும், சத்தியமாக எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது... அவருக்கு ஒரு சில கேள்விகள்:

இந்த விஷயம், அப்போதே தெரிவிக்கப் பட்டிருந்தால், என்ன செய்திருப்பீர்கள்?
2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த விஷயம் மக்களுக்கு அதிகாரப் பூர்வமாகத் தெரிந்திருந்தால், நீங்கள் பெற்ற இமாலய வெற்றியைப் பெற்றிருக்க முடியுமா?
என்றோ நடந்த சீக்கியப் படுகொலைக்கு (இந்திரா காந்தி கொலையுண்ட மறுநாள் டில்லியல் காங்கிரஸ் குண்டர்களால் நிகழ்த்தப் பட்டது), பிரதமர் மன் மோகன் சிங், தேர்தலின் போது சீக்கியர்களிடம் காங்கிரஸ் சார்பில் மன்னிப்புக் கேட்க வில்லையா? வோட்டுக்காக, எந்த விஷயத்தை தோண்டுவது, எந்த விஷயத்தைப் புதைப்பது என்று தீர்மானிக்க நீங்கள் யார்? இது மக்களுக்கு நீங்கள் இழைக்கும் பச்சை துரோகம் இல்லையா?
சோதனைகளை மட்டும், அது போன பீரியட் என்று சொல்லி ஒதுக்கி வைக்கும் நீங்கள், இன்றும் ஏன் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி (அதற்கப்புறம் நீங்கள் சொல்லிக் கொள்ளும் படி ஒரு சாதனையையும் செய்ய வில்லை என்பது வேறு விஷயம்) செய்த சாதனைகளை எல்லாம் சொல்லி, தேர்தல்களில் (கருமம், நூறு பேர் ஓட்டுப் போடும் உள்ளாட்சித் தேர்தலில் கூட, உங்களுக்கு சொல்லிக் கொள்ள அவற்றை விட்டால், வேறு விஷயம் சிக்க மாட்டேங்குது) வோட்டுக் கேட்கிறீர்கள்?

வடிவேலு காமடி செய்யாமல், மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு, ஒரு பொறுப்பான மூத்த காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பதில் சொல்ல முடியுமா பிரணாப் முகர்ஜி அவர்களே?

- கலைபிரியன்

Wednesday, March 16, 2011

சாதிக் பாஷா தற்கொலை மற்றும் ம.தி.மு.க புறக்கணிப்பு - கிழியும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வின் முகத்திரை...

தமிழகத்தின் இன்றைய தலைப்புச் செய்திகளாக இடம் பிடிக்கும் இரண்டு செய்திகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வின் பச்சை சந்தர்ப்பவாதத்தைப் படம் பிடித்துக் காட்டுபவையாக அமைந்துள்ளன.

முதலாவதாக, முன்னாள் மத்திய மந்திரியும், இந்நாள் திஹார் சிறைக் கைதியுமான, ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும் (அவரது பினாமி எனக் கருதப் படும்), ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ ஆல் விசாரிக்கப் பட்டவருமான சாதிக் பாஷாவின் தற்கொலையைப் பார்க்கலாம். "ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அப்ரூவராக மாறப் போகிறார்" என்றும் "இன்று தில்லிக்குச் செல்ல விமான டிக்கட் எடுத்து வைத்திருந்தார்" எனவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட சாதிக் பாஷா திடீர் திருப்பமாகத் தனது படுக்கையறையில், இன்று காலை, தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். ராசாவின் குடும்பத்தினர், அவர் மந்திரியாகப் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு துவங்கிய "கிரீன் ஹவுஸ்" கட்டுமான நிறுவனத்தில் பங்குதாரராகவும், நிறுவனத்தை நடத்தும் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் இந்த சாதிக் பாஷா என்பதும், சில லட்சங்கள் முதலீட்டுடன் தொடங்கப் பட்ட இந்நிறுவனம், துவங்கிய மிகக் குறுகிய காலத்துக்குள், இன்று சுமார் 600 கோடி மதிப்புப் பெற்றது எனவும் செய்திகள் கசியத் தொடங்கியபோது, அனைவருக்கும் தலை சுற்றித் தான் போனது. அவ்வாறு சேகரிக்கப் பட்ட பணம் பெரும்பாலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக தொலை தொடர்பு நிறுவனங்கள் ராசாவுக்கு ஹவாலா முறையில் கையூட்டாகக் கொடுத்த பணம் என்று சிபிஐ சந்தேகக் கணை தொடுக்க, அதன் விசாரணை வளையத்துக்குள் சிக்கி ஒரு வழியாகத் தான் போனார் சாதிக் பாஷா.

ஒரு வேளை, இவர் தற்கொலை செய்து கொள்ளாமல் அப்ரூவர் ஆக மாறி இருந்தால், இன்னும் யார் யார் எல்லாம் இவ்விவகாரத்தில் சிக்கியிருக்கக் கூடும்? அப்படி ஆகாமல் போனதால், யார் யார் காப்பாற்றப் படுகிறார்கள்? இவர் தற்கொலை செய்து கொண்டதில், தங்களைக் காத்துக் கொள்வதற்காக, அதிகார வர்க்கத்தின் தூண்டுதல் ஏதாவது உள்ளதா? என்னதான் சட்டப் பூர்வமற்ற காரியங்களில் தலையைக் கொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு அவர் வந்திருந்தாலும், அவரது மனைவிக்கும், இளம் குழந்தைகளுக்கும், ஒரு குடும்பத் தலைவனாக இருக்க வேண்டிய பொறுப்பை அவர் இழந்ததற்கு யார் பொறுப்பு என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி...

தி.மு.க சம்மந்தப் பட்ட பினாமி விவகாரங்களில் இது ஒன்றும் புதிதல்ல. சில வருடங்களுக்கு முன் ஸ்டாலினின் பினாமி என்று வர்ணிக்கப் பட்ட ரமேஷ் கார்ஸ் "ரமேஷ்", மிகக் குறுகிய காலத்துக்குள் தொழில்முறையில் அசுர வளர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். திடீர் என்று, என்ன ஆனதோ, ஏதானதோ, குடும்பத்துடன் (பச்சிளங்குழந்தை உட்பட) விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். தலைவரின் ஒரு வாரிசுக்காக அன்று ரமேஷ் பலிகடா ஆக்கப் பட்டார் என்றால், இன்று சாதிக் பாஷாவும் தலைவரின் இன்னொரு வாரிசுக்காக பலிகடா ஆக்கப் பட்டிருக்கிறார் என்றல்லவா அர்த்தம்? இந்த அவலங்களுக்கு முடிவே இல்லையா?

அரசியல் அதிகாரம் நிரம்பியவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அவர்களுக்குத் தேவை எனும் பொழுது யாரை வேண்டுமானாலும் எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கு ஆபத்து நேரும்போது இவ்வாறு அவர்கள் குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்துவது என்பது பச்சை சந்தர்ப்பவாதம் இல்லையா? என்ன தான் தீய வழியில் செல்வம் சேர்க்கத் துணை போனவர்கள் என்றாலும், எய்தவன் இருக்க அம்பை மட்டுமே பதம் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

பினாமிகளாக இருப்பவர்களும் தொலை நோக்குப் பார்வை அற்றவர்களாக இருப்பதுதான், இதில் வேதனை. சில ஆயிரம் கையில் இருக்கும் போது இவர்கள் வாழ்ந்த நிம்மதியான வாழ்க்கை, சில லட்சங்கள் சில கோடிகள் கையில் எளிதாகப் புரள ஆரம்பிக்கும் போது பஞ்சாய்ப் பறந்துவிடுகின்றது என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். சிபிஐ, உச்சநீதிமன்றம் போன்ற தனி அதிகாரம் படைத்த அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட்டு, இப்படிப்பட்ட விஷயங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்.

இரண்டாவது, தனது நீண்ட நாள் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க வைப் புறக்கணித்துவிட்டுத் தன்னிச்சையாகத் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அம்மையார் வெளியிட்டிருக்கிறார் என்ற செய்தி. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறியும், சினிமாவில் நடித்த விளம்பரத்தையும், சாதியப் பின்னணி கொண்டும் கட்சி நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் முதல் மரியாதையுடன் தொகுதிப் பங்கீட்டின் போது பந்தி பரப்பிவிட்டு, வெற்றி, தோல்வி கருதாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக, கடைமட்ட அ.தி.மு.க தொண்டனைவிட அதிகமாகத் தன் புகழைப் பரப்பி வந்த பிரசார பீரங்கி, கொள்கைக் குன்று, புரட்சிப் புயல் வைகோ அவர்களின் கட்சியான ம.தி.மு.க வைக் கேவலமான முறையில் உதாசீனப் படுத்திவிட்டுத் தேர்தல் களம் காணப் புறப்பட்டுவிட்டார் அம்மையார். யாரும் தன்னுடன் கூட்டு வைக்கவே அஞ்சும் காலத்திலும், தன்னால் அவமானப் பட்ட பின்னரும், தனது உற்ற தோழமையை நல்கி உழைத்த ஒரு உன்னதமான மனிதருக்கும், தோல்விகளை மட்டுமே சுவைத்துக் களைத்தும், அவர் பின்னால் விலை போகாமல் நிற்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் இன்னும் வசந்த காலம் என்பது வெகு தூரம் என்றாகிவிட்டது. இது, ஏற்கனவே இது போன்ற புறக்கணிப்புக்களுக்குப் பெயர் போன, இன்றைய அ.தி.மு.க வின் பச்சை சந்தர்ப்பவாதத்துக்கு மற்றும் ஓர் உதாரணம் என்பதில் ஐயமில்லை.

இது போன்ற சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்குத் தான் வாக்காளர்களின் உள்ளங்களிலும் இடம் என்பது தான் இன்றைய ஜனநாயகத்தின் அவலமான நிலையாகிவிட்டது.

மற்ற ஈன அரசியல்வாதிகளைப் போல் இல்லாமல், கொள்கை மாறாமல் முழக்கமிட்டுவந்த வைகோ அவர்கள், இனியேனும் மற்றவர்களைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தன் கட்சியின் அங்கீகாரத்துக்கும், கட்சியினரின் பதவிகளுக்கும் ஒரு சில சமரசங்களைச் செய்து கொள்ள அவர் இனியும் தயங்கினார் என்றால், இன்றைய நிலையில், இனிமேலும் கட்சியை நடத்துவது மிகவும் கடினம்.

அதே சமயம் திருந்துவதற்குத்  திரும்பத் திரும்ப சந்தர்ப்பம் கிட்டினாலும், அவற்றைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு தான் அரசியல் நடத்துவேன் என்று அம்மையார் அவர்களும் தொடர்ந்து தனது செய்கைகள் மூலமாக நிரூபிப்பாரே ஆனால், அவரது கட்சிக்கும் அது நல்லதல்ல என்பதை அவரும் என்றாவது உணரத் தான் வேண்டும்.

- கலைபிரியன்