வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, March 17, 2011

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்பி க்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் - விகிலீக்ஸ் தகவல் - நல்லா இருக்குதைய்யா பிரணாப் முகர்ஜி ஞாயம்... வடிவேலு ஸ்டைலில் - "ஹ்ம்... அது போன மாசம்..." என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறார்...


கடந்த மூன்று நாட்களாக, விகிலீக்ஸ் இணையதளத்தில் இந்தியா தொடர்பாகக் கசிந்த தகவல்கள் பற்றி இந்து நாளிதழில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

முதலில், திருமங்கலம் இடைத் தேர்தலின் போது, அஞ்சா நெஞ்சன் அழகிரி சார்பில் ஒவ்வொரு வாக்காளருக்கும் 5000 ரூபாய் கவரில் வைத்து செய்தித் தாள்களில் மடித்துத் தரப் பட்டன என்று அவரது ஆதரவாளரான மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் கூறியதாக ஒரு செய்தி. ஊர் உலகத்துக்கே தெரிந்து, இத்திருநாட்டில், தேர்தல் என்று ஒன்று வந்தாலே, "திருமங்கலம் பார்முலா" என்று, நாடே நாறிய பிறகு, இதனை நமக்குத் தெரிவிக்க விகிலீக்ஸ் தேவையில்லை என்பது வேறு விஷயம்.

அடுத்து, சிவகங்கை தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலின் போது, இன்றைய உள்துறை அமைச்சர், மாட்சிமை தங்கிய (அறிவுஜீவி), திரு. ப. சிதம்பரம் அவர்களுக்காக, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தொகுதியில், சிறப்பாகத் தேர்தல் பணி செய்ததாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுவதாக ஒரு தகவல். வாக்காளர்களுக்கும், அவர்களுடைய கிராமங்களுக்கும் பணம் பட்டுவாடா செய்வதில், அவரது தந்தைக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட, அவர் அப்பணிகளை அற்புதமாகச் செய்வதாகப் பாராட்டுப் பத்திரம் வேறு வாசித்திருக்கிறார். எனக்கு ஒன்று தான் புரியவில்லை, இவ்வளவு செய்தும், கடைசியில் சிதம்பரம் தோற்றதாக அறிவிக்கப்பட்ட பின், எவ்வாறோ ஞானோதயம் பிறந்து ராவோடு ராவாக, அவர் ஜெயித்ததாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? இது சம்பந்தமாக, விகிலீக்சில் ஏதாவது தகவல் கசிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

ஊரறிந்த விஷயங்கள், கசிந்தால் என்ன, கசியாவிட்டால் தான் என்ன? தேசிய அளவில் நாறிக் கொண்டிருந்தவர்கள், இதன் மூலம், சர்வதேச அளவில் நாறிக் கொண்டிருக்கிறோம்... இது காங்கிரஸ் மற்றும் தி.மு.க அரசுகளின் மகத்தான சாதனை அல்லவா? தேர்தல் அறிக்கையில் சொல்லாத இப்படியான சாதனைகளையும் நிகழ்த்துவதில் இவர்களை மிஞ்ச யாரால் முடியும்? ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாறிய அளவு ஒன்றும், இவ்விஷயங்களால் நாற வில்லை. அந்த வகையில் ராசாவும், கனிமொழியும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம், அவர்களது சாதனை முறியடிக்கப் படவில்லை என்று.

மூன்றாவது, முக்கியமானது - அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில், கடந்த 13 ஆவது நாடாளுமன்றத்தில், அன்றைய அரசு மீது, இடதுசாரிக் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசுக்கு ஆதரவாக வோட்டளிக்க, எம்.பி க்களுக்கு லஞ்சம் தரப்பட்டது என்னும் தகவல். தாங்களும் மக்கள் பிரதிநிதிகள் என்று காட்டிக் கொள்ள ஏதாவது கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருந்த எதிர்க் கட்சியினர், இந்த விஷயத்தை "லபக்" என்று பற்றிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் நேற்று அமளி துமளி செய்ததாக ஒரு செய்தி... அதற்கு, எந்தப் பிரச்சனையில் காங்கிரஸ் ஆப்பு வாங்கினாலும், எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த ஆப்பை அகற்றும் வல்லமை படைத்த (chief troubleshooter), மூத்த அரசியல்வாதி (பாவம், இவரையும் ஒருமுறை கொலுவில், பிரதமர் பொம்மை ஆக்கி அழகு பார்க்கத் தான் சோனியாவுக்கு மனசு வர மாட்டேங்குது...), இன்றைய நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி, எழுந்து ஒரு விளக்கம் தந்தாரே பார்க்கலாம்... "இத் தகவல், ஒரு வல்லரசு நாட்டுக்கும், அதன் தூதரகத்துக்கும் இடையே நடந்த விஷயம். அது போக, இது நடந்தது, கடந்த 13 ஆவது நாடாளுமன்றத்தில். இப்போது நாம் இருப்பது, 14 ஆவது நாடாளுமன்றம். அதனால், இத் தகவல்களை உறுதிப் படுத்துவதோ, மறுப்பதோ, இயலாத காரியம். 13 ஆவது நாடாளுமன்றத்தில் என்ன நடந்திருந்தாலும், அதன் ஆயுட் காலம் முடிவடைந்ததுமே, அவ்விஷயங்களும் முடிவுக்கு வந்து விடும். இப்பிரச்சனைகளை, இப்போது அலசுவது தேவை இல்லாதது..." என்று...

யப்பப்பா... இவ்வளவு பொறுப்புணர்ச்சி மிக்க பதிலை, இக்கட்டான நேரத்தில், அதுவும், நாடாளுமன்றத்தில் சொல்லவும் ஒரு துணிவு வேண்டும், மனிதருக்கு... வின்னர் படத்தில், வடிவேலு, "அது, போன மாசம்..." என்று ஒரு பிரபலமான வசனம் பேசியிருப்பார். இந்தப் பதிலைக் கேட்டதும், சத்தியமாக எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது... அவருக்கு ஒரு சில கேள்விகள்:

இந்த விஷயம், அப்போதே தெரிவிக்கப் பட்டிருந்தால், என்ன செய்திருப்பீர்கள்?
2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த விஷயம் மக்களுக்கு அதிகாரப் பூர்வமாகத் தெரிந்திருந்தால், நீங்கள் பெற்ற இமாலய வெற்றியைப் பெற்றிருக்க முடியுமா?
என்றோ நடந்த சீக்கியப் படுகொலைக்கு (இந்திரா காந்தி கொலையுண்ட மறுநாள் டில்லியல் காங்கிரஸ் குண்டர்களால் நிகழ்த்தப் பட்டது), பிரதமர் மன் மோகன் சிங், தேர்தலின் போது சீக்கியர்களிடம் காங்கிரஸ் சார்பில் மன்னிப்புக் கேட்க வில்லையா? வோட்டுக்காக, எந்த விஷயத்தை தோண்டுவது, எந்த விஷயத்தைப் புதைப்பது என்று தீர்மானிக்க நீங்கள் யார்? இது மக்களுக்கு நீங்கள் இழைக்கும் பச்சை துரோகம் இல்லையா?
சோதனைகளை மட்டும், அது போன பீரியட் என்று சொல்லி ஒதுக்கி வைக்கும் நீங்கள், இன்றும் ஏன் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி (அதற்கப்புறம் நீங்கள் சொல்லிக் கொள்ளும் படி ஒரு சாதனையையும் செய்ய வில்லை என்பது வேறு விஷயம்) செய்த சாதனைகளை எல்லாம் சொல்லி, தேர்தல்களில் (கருமம், நூறு பேர் ஓட்டுப் போடும் உள்ளாட்சித் தேர்தலில் கூட, உங்களுக்கு சொல்லிக் கொள்ள அவற்றை விட்டால், வேறு விஷயம் சிக்க மாட்டேங்குது) வோட்டுக் கேட்கிறீர்கள்?

வடிவேலு காமடி செய்யாமல், மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு, ஒரு பொறுப்பான மூத்த காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பதில் சொல்ல முடியுமா பிரணாப் முகர்ஜி அவர்களே?

- கலைபிரியன்

No comments: