வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, February 3, 2011

உன் விரலோரக் கவிதைகள்!!!

உன் விரல்களிலிருந்து
வெட்டப் பட்ட
மூன்றாம் பிறைகளில்,
ஒன்றைக் காணவில்லை
என்று, என்
பாழாய்ப் போன
மனதில், புலனாய்வுக்குழு
அமைத்துத் தேடுகிறேன்...
என் கையிலிருந்து
அதைத் தட்டிப்
பறித்துச் சென்ற
காற்றின் மீது,
குண்டர் தடுப்புச்
சட்டம் போடலாம்
என்று உத்தேசம்!!!
அதை ஒருகாலத்தில்,
பதம் பார்த்தது
உன்னுடைய பற்கள்
என்பதால், அவைக்கு
மட்டும் விதி விலக்கு!!!
அந்த விரலோரக்
கவிதை, வருடிப்
போன என்
விரல்களும், கன்னமும்
ஏக்கமாய்க் காத்துக்
கிடக்கின்றன, என்று
கிட்டும் என்று!!!

- கலைபிரியன்

Wednesday, February 2, 2011

நம்ம ராஜாவுக்குத் (CMமுக்குத் தான்) திரும்பிய பக்கமெல்லாம் செக்...

1. மத்திய ஆட்சி முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருப்பதால், தொகுதிப் பங்கீட்டில் முறைத்துக் கொண்டு, அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து விட முடியாது, அப்படியே வந்து விட்டாலும், ராஜாவுக்கு ஆப்புத் தான் (நான் ஆ. ராசாவைச் சொன்னேன், நீங்க வேற... மூத்த தமிழறிஞரைப் பத்தி அப்படிச் சொல்ல முடியுமா... சொன்னால், நமக்குப் புரியாமல், அவருக்கு மட்டுமே புரிந்த தமிழில், முரசொலியில் நம்மளைப் பத்திக் கவிதை எழுதுவார்... நமக்கேன் வம்பு...).

2. காங்கிரசிடம் பிகு செய்வதற்காக, பாமக நம்மக்கிட்ட இருக்குன்னு சும்மானாச்சுக்கும் சொல்லிவச்சு, டாக்டர் அய்யா காண்டாயி மறுப்புத் தெரிவித்து விட்டார். வயசுக் கோளாறுல, அவரு மேல கோபப் பட்டு, "கூட்டணியில் அவர்கள் சேர வாய்ப்பில்லைன்னு" வேற சொல்லிட்டாரு. ராசாவைக் கைது செஞ்சு காங்கிரஸ் பேரம் பேச ஆரபிச்சதும், வடிவேலு ஸ்டைல்ல "அய்யய்யோ, வட போச்சே"ன்னா, யாரு என்ன பண்ண முடியும்...

3. காங்கிரஸ் கோச்சுக்குட்டு போயி கேப்டனோட மூணாவது அணி கச்சேரி வச்சா, அந்தம்மா, டாக்டரை வளைச்சுப் போட்டுக்குச்சுன்னா, அண்ணாவின் தம்பியும், சிறுத்தைகளும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் நிற்கறதுக்கு ஆள் தேடுறதுக்குள்ள, தாவு தீந்து போகும்...

4. இது பத்தாதுன்னு, "மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் தான் இடி, நமக்குத் திரும்பிய பக்கமெல்லாம் தாரை தப்பட்டை எல்லாம் கிழிந்து தொங்குகிற மாதிரி இடி மேல் இடி"ன்னு, குடும்பத்துல எல்லா சைடுலேருந்தும் ஏகத்துக்கு குத்து விழுகுது...

87 வயசுல இதெல்லாம் ஆவுற கதையா? இவரு வயசுக்கு இருந்திருந்தா, சாணக்கியரே ஒதுங்கி ஓய்வெடுத்துக்கிட்டு இருப்பார்... இவர்னால, அந்தக் கருமத்தையும் எடுக்க முடியாம, ப்ச், பாவமாத் தான்யா இருக்கு...

நம்ம ஆட்சியில, நெடுஞ்செழியனுக்கு (அண்ணாவுக்குப் பின்னாடி, அவரு ஒதுங்கி நமக்கு வழி விட்டாரேங்குற ஒரே மரியாதைக்காவது...) மெரினா பீச்ல இடம் ஒதுக்கி இருந்தா, அந்தம்மாவவது, நமக்கு இடம் ஒதுக்குவது பத்திப் பரிசீலிக்கலாம், இப்ப அதுக்கும், "அய்யய்யோ, வட போச்சே" கத தான்...

யார் ஊனம்!!!

உண்மை பேச மறுப்பவன், "நா" இருந்தும் "ஊமை"...
சூழ்ச்சிக்கு செவிமடுப்பவன், "காது" இருந்தும் "செவிடன்"...
கேடுகளை மட்டுமே காண்பவன், "கண்கள்" இருந்தும் "குருடன்"...
ஓடி ஆடி உழைக்காதவன், "கை கால்கள்" இருந்தும் "ஊனமுற்றவன்"...

"ஊனமுற்றவன்" என்று நாம் யாரைப் பார்த்துச் சொல்லித் திரிகிறோமோ,
உண்மையில், அவனே, இறைவனின் ஞானம் பெற்றவன்...
அவன் தான் மனதில் ஈரமும், மானமும் ஒருங்கே உள்ளவன்...
அவனிடம் கருணை கொண்டு, இனியாவது வாழ்வோம், ஊனமில்லாதவர்களாய்!!!

- கலைபிரியன்

Monday, January 31, 2011

நீண்டது, ஒரு "கை"!!!

ன்றாடம்
அழுவதற்கென்றே
நேரம் ஒதுக்கி
வாழ்கையில்,
அரவணைக்க -
நீண்டது,
ஒரு "கை"!!!
ற்றாமை
என்னை
விழுங்கி
ஜீரணித்து விட்ட
வேளையில்,
ஆதரவுடன் -
நீண்டது,
ஒரு "கை"!!!
யலாமை
தொற்றிக் கொண்டு
இறுக்கி
நெரித்த போது,
இசைவாக -
நீண்டது,
ஒரு "கை"!!!
"சா,
ஏனிந்தக்
கொடுமை"
என்றழுத போது,
ஈகையுடன் -
நீண்டது,
ஒரு "கை"!!!
றக்கமின்றி
உழற்றும்
நிலை
வந்த போது,
உற்சாகமாய் -
நீண்டது,
ஒரு "கை"!!!
சலாடி
உள்ளம்,
அங்குமிங்கும்
அலைபாயும் போது,
ஊக்கமளிக்க -
நீண்டது,
ஒரு "கை"!!!
திர்நீச்சல்
மட்டுமே
எஞ்சி
இருக்கையில்,
எழுப்பி விட -
நீண்டது,
ஒரு "கை"!!!
க்கம்,
எந்தன்
ஆக்கத்தைக்
கவ்விக் கொள்ள,
ஏற்றம் தர -
நீண்டது,
ஒரு "கை"!!!
ந்தெழுத்து
நிரம்பிய
அந்தக் "கை"...
ளிமயமான
எதிகாலத்தை,
சையின்றி
ஏந்தி வரும்...
ஒளவைப் பாட்டி
தொடங்கி, அனைவரும்
ஓதிய...

நம்பிக்"கை"!!!

- கலைபிரியன்...

Thursday, January 27, 2011

இந்தியாவின் நவீன இமயம்!!!

நான்கரை சொச்சம் அடி நிரம்பிய
நவீன இமயம் நீ தான்!!!
தடுப்பாட்டம் தொடங்கி, எதிரியைத்
தகர்த்தாடும் திறன் வரை,
எல்லாம் கொண்ட நீ...
துடுப்பெடுத்து ஓடி வந்தால்,
துடித்துக் கிடக்கும் எங்கள் மனம்!!!
நிறை குடம் நீ என்று
பறை சாற்றும் உந்தன் குணம்!!!
எவரஸ்ட் உச்சியை தொடாத
நான், உன் சாதனை சிகரத்தை
உச்சி முகரும் ரசிகன்!!!
சிரிப்பை சுமந்து கொண்டே
சூர சம்ஹாரம் செய்வது, உனக்கே
உரித்த கலை; எதிரி,
விழுவது உந்தன் வலை!!!
அவன் சுமந்து வருவது
பந்தை அல்ல, முன்
பிறப்பில் செய்த பாவத்தை!!!
உன்னை தழுவ முயற்சி
செய்து கொண்டிருக்கிறதாம் உலகக்
கிண்ணம்!!! அது உன்னை
நழுவாமல் அடைந்தால் மலரும்
உன் குழி விழும் கன்னம்!!!
கோடிக் கணக்கான இதயங்கள்
மகிழும் என்பது திண்ணம்!!!
பாரத ரத்னா உன்னை
நோக்கி ஓடி வருவதாய்
அறிகிறேன்!!! பார்ப்போம்,
அந்த உயரிய பட்டம்,
தனக்கே என்று மகுடம்
சூட்டிக் கொள்கிறதென்று!!!

- கலைபிரியன்

Wednesday, January 26, 2011

வருகின்ற பொதுத் தேர்தல் குறித்த என்னுடைய பார்வை...

  • கிறுகிறுக்க வைக்கும் விலைவாசி ஏற்றம்...
  • மலைக்க வைக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல்...
  • கேள்வி கேட்க ஆளில்லாமல் தினசரி உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் செல்லும் மீனவர்கள்...
  • ஊரெங்கும் கட்சிக் காரர்களின் கட்டப் பஞ்சாயத்து மற்றும் அடாவடி...
  • கொலை கொள்ளை கடத்தல் என்று தினசரி நீளும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை...
  • இவற்றைக் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் காவல் துறை...
  • முழுமையாக வாரிசுகளால் கபளீகரப்படுத்தப்பட்ட சினிமா மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள்...
  • எங்கு நோக்கினும் வாரிசுகளின் சொத்துக்கள், நிலங்கள் மற்றும் தொழில்கள்...
  • மொத்தத்தில், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, விரிவாக்கப் பட்ட ஒரு குடும்ப சாம்ராஜ்யம்...
  • மனசாட்சியே இல்லாமல் சில மயில் தூரத்தில் நடந்த லட்சக் கணக்கான இரக்கமற்ற படுகொலைகளை வேடிக்கை பார்த்தது...
  • கடிதங்கள் எழுதியும் பகுதி நேர உண்ணா விரதம் இருந்தும் அவர்களின் அவல நிலையை மேலும் ஏளனம் செய்தது...
  • அரசியலையும் தேர்தல்களையும் எந்நாளிலும் இல்லாத அளவுக்கு வெட்கக் கேடான நிலைக்குத் தள்ளியது...
  • இலவசங்களை வாரி வழங்கி கஜானாவை காலி செய்து மக்களின் மூளையையும் மழுங்கடிக்கச் செய்தது...
  • பொழுது விடிந்து பொழுது போனால் பாராட்டு விழாக்களில் அமர்ந்து ஐஸ் மழையில் நனைவது...
  • குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் விழா மேடைகளில் கூடிக் கும்மாளம் அடிப்பது...
மேற்குறிப்பிட்டது போல இன்னும் பற்பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும், அடுத்த தேர்தலை மக்களுக்கு முன் நின்று, சந்தித்து, வென்று, மகனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டி விட முடியும் என்று ஒருவர் நினைத்தால், அது, அந்த மாநில மக்களின் இழிநிலை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படிப் பட்ட சக்திக்கு மாற்றாக உலா வருபவரும் ஒன்றும் உத்தம சீலர் அல்ல என்றாலும், பெரிய கோட்டுக்குப் பக்கத்தில் நிற்கும் போது சிறியதாகத் தோன்றும் இரு கோடுகள் தத்துவத்தைப் போல, அவ்வளவு மோசமானவர் அல்ல என்று சொல்லும் அளவுக்குத் தான் கடந்த ஐந்து ஆண்டுகளும் ஆட்சி நடந்த லட்சணம் அமைந்துள்ளது.

ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் விடிவு காலம் என்ற நிலை இன்று உள்ளதால், மாற்றாக உள்ள தலைவரையும் வரும் தேர்தலில் மக்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆகா வேண்டும். அவரும், தனது பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு, பொறுப்புணர்ச்சியை உணர்ந்து, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் சென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த பிறகும், எப்படி நடக்கக் கூடாது என்றமைக்கு உதாரணமாக அமைந்த கடந்த ஐந்தாண்டு ஆட்சியைப் பார்த்துப் பாடம் கற்று, தனக்கு இயல்பாகவே உள்ள ஆளுமை மற்றும் நிர்வாகத் திறமையுடன் ஓரளவாவது நமது மாநிலத்தை மீட்டெடுக்க முனைவார் என்று நம்புவதைத் தவிர இன்றளவில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. வழக்கம் போல் இம்முறையும் நம்பி ஏமாற மாட்டோம் என்று நம்புவோம்...

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்து வாக்களிக்கும் அவல நிலைக்கு இன்று மக்கள் தள்ளப் பட்டதற்கு, பெரியாரும், அண்ணாவும் வளர்த்த திராவிட மற்றும் சுய மரியாதைக் கொள்கைகள் கொண்ட பேரியக்கம் நாளுக்கு நாள் பிளவு பட்டமையும், சுய நலம் கொண்ட சிலரின் கூடாரங்களில் சிக்கித் தவிப்பதும், அவர்களுக்கு மாற்றான ஆளுமை மற்றும் அர்பணிப்பு உணர்வு கொண்ட தலைவர் ஒருவர் கூட வாய்க்காமல் போனதும் தான் காரணம்.

இந்நிலையை மாற்ற வேண்டுமென்றால் மக்கள் மத்தியில் வேட்பாளர்களைத் தரம் பிரித்துப் பார்த்து வாக்களிக்கும் தன்மை வர வேண்டும். அப்படிப் பட்ட பொறுப்புணர்வு வரும் அளவுக்கு மக்களை உந்தி வழி நடத்திச் செல்ல விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்துவதும், தகுதி வாய்ந்த படித்த இளைஞர்கள் அரசியல் பால் திரும்புவதும் மிகவும் அவசியம்.

நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்... முதலில் வரும் தேர்தலுக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்... விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும் நமது ஒவ்வொரு வாக்கையும் வீணடிக்காமல் பயன்படுத்துவோம்... தவறினால், அடுத்த வாய்ப்பு வரும் போது எந்த நிலையில் இருப்போம் என்பதை விழிகளின் முன் நிறுத்திப் பார்ப்போம், ஒரு கணம்...

வாழ்க ஜனநாயகம்!!!

- கலைபிரியன்

Thursday, January 20, 2011

என் அழகுப் பதுமையே?!

உன் கண்களிரண்டும் -
கம்பன் வீட்டுக்
கட்டுத் தறி...
அவை சொல்லாமல்
சொல்லும் ஒவ்வொரு
சொல்லும்... மொழிசாரா
இலக்கியம்!!!
இமைகள் இரண்டிலும்,
இமாலயக் குளுமை!!!
இரு பனிக்
குவியல்களுக்கிடையே...
புதைந்திருக்கும் விழிகளோ,
காஷ்மீரத்து திராட்சைகள்!!!
அவற்றின் அசைவிற்குத்தான்
எத்தனை ஆயிரம்
அர்த்தங்கள்!!!
மௌனமாய்ப் பகரும்
மறுமொழிகள், கோபமாய்
வீசும் கணைகள், ஆசையாய்ப்
பாயும் கடலலைகள்,
செல்லமாய்ச் சிணுங்கும்
சீண்டல்கள், சோகம்
சொல்லும் கேவல்கள்,
சோர்வைச் சொல்லும்
சுமைகள், அன்பைச்
சொரியும் வெட்கம்,
கருணை பொங்கும்
கனிவு, பக்திக்கு
மூடும் இமைகள்...
இன்னும் பலப்பல
விஷயங்கள், உன்
விழிகளில் வீற்றிருக்க...
பேசி ஏன் கொல்கிறாய்,
என் அழகுப் பதுமையே?!!