1967 தேர்தலில், காமராஜரை எதிர்த்து தி.மு.க சார்பில் பெ. சீனிவாசன் என்ற இளைஞர் களம் கண்டு வென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரது வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கூட்டப்பட்ட பொதுக் கூட்டத்தின் போது நடந்த சுவையான சம்பவம்.
அந்தப் பகுதியில் சிலரால் அறியப்பட்ட ந. காமராஜ் என்ற இளைஞர் இருந்தார். அவர் படித்தவர். அவர் பெ. சீனிவாசனைப் பாராட்டிப் பேச ஏற்பாடாகியிருந்தது. அதற்காக தி.மு.க அடித்த சுவரொட்டியில் இருந்த வாசகம் - "பெ. சீனிவாசனைப் பாராட்டிப் படித்த காமராஜ் பேசுவார்" என்று காமராஜரை மட்டம்தட்டுவது போல அமைந்திருந்தது அந்த வாசகம்.
அதனைப் பெரியார் கவனத்துக்குக் கொண்டு செல்கின்றனர். அவர் சொன்னார் - "சுவரொட்டியில் ஒரு சின்னத் திருத்தம். பெ. சீனிவாசனைப் பாராட்டிப் படிக்காத காமராஜ் கட்டிய பள்ளிக்கூடத்தில் படித்த காமராஜ் பேசுவார் என்றிருந்திருக்க வேண்டும்..." என்று.
காமாராஜர் ஆட்சிக்கு வந்த போது, தமிழகத்தில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 35,000. அவர் ஆட்சியில் இருந்து இறங்கும் போது, அவை 1,60,000. இந்தப் புள்ளிவிவரத்தைக் கூட எடுத்து வைக்காமல், சுவரொட்டி ஒட்டியவர்களை நாணித் தலை குனியச் செய்திருக்கிறார் பெரியார். இன்று, அவர் வழித் தோன்றலாக உருவாகிய கட்சிகளின் கழகக் கண்மணிகள் நடத்துகின்ற கூட்டங்களையும், கடைபிடிக்கின்ற நாகரீக அணுகுமுறைகளையும் காணும் போது, இவ்விஷயங்களைக் கேள்விப் படுகின்ற நமக்கு ஏக்கமாகத் தானே இருக்கும்?
- கலைபிரியன்
1 comment:
பெரியார் பெரியவர்தான்.
சகாதேவன்
Post a Comment